வடை போச்சே.. சீட் கிடைக்காத விரக்தியில் புலம்பும் அதிமுக 'தலை'கள்
சென்னை: லோக்சபா தேர்தலில் எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என்று காத்துக் கிடந்து ஏமாந்து போன அதிமுக பெருந்தலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை தமது பிறந்த நாளன்று அறிவித்தார் ஜெயலலிதா. அதில் சிட்டிங் எம்.பிக்கள் மூவரைத் தவிர மற்ற 37 பேரும் புதுமுகங்கள். இவர்களில் பெரும்பாலும் பட்டதாரிகள்.
மாவட்ட செயலர்கள், அதிமுகவின் நால்வர் அணி மற்றும் உளவுத்துறை அளித்த பட்டியலை வைத்து 'ஆராய்ந்து'தான் வேட்பாளர்களை இறுதி செய்தாராம் ஜெயலலிதா. இப்போதே வேட்பாளரை அறிவித்துவிட்டால் புகார்கள் வந்தால் அவர்களை மாற்றுவதற்கும் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தாராம் ஜெ.
ஓ.பி, நத்தம் விஸ்வநாதன்
இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே பல அதிமுக பெருந்தலைகள் அதிர்ந்து போயுள்ளனர். தேனி தொகுதியை மகனுக்கும் திண்டுக்கல் தொகுதியை மைத்துனருக்கும் பெற்றுவிட காத்திருந்த அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி. இதேபோல் அக்கா மகனுக்கு சீட்டு கேட்டிருந்த செல்லூர் ராஜூவுக்கும் கடும் ஷாக்காம்.
பி.ஹெச். பாண்டியன்
அத்துடன் நெல்லை தொகுதியை தமக்குத்தான் தருவார் என்று வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனுக்கும் செம அதிர்ச்சியாம்.
பாலகங்கா
மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாவோம் என்று கனவு கண்ட பாலகங்கா, மத்திய சென்னை வேட்பாளர் தாமே என்று கூறி வந்திருக்கிறார். அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது.
சைதை துரைசாமி
சென்னை மேயரான சைதை துரைசாமி தமது மகனுக்கு எப்படியும் தென்சென்னையை வாங்கி சென்னையில் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள நினைத்தார். ஆனால் அவரது அரசியல் எதிரியான ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு கிடைத்தில் மிகவும் ஆடிப்போனாராம் சைதையார்.
சிட்டிங் எம்.பிக்கள்
இதேபோல் சிட்டிங் எம்.பிக்கள் சிலரும் ரொம்பவே நம்பிக்கையோடு அதிமுக தலைமைக் கழகத்தில் வலம் வந்தனர். அவர்களுக்கும் செம ஆப்பு வைத்துவிட்டார் அம்மா என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள்