காவிரி வாரியத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கை... ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகள் ஆலோசனை!
காவிரி உரிமைகளை மீட்டெடுக்க அடுத்தகட்டமாக என்ன மாதிரியான போராட்டத்தை முன் எடுப்பது என்று திமுக தலைமையில் கூடும் அனைத்துக்கட்சி இன்று முடிவு செய்கிறது.
Recommended Video
சென்னை: காவிரி உரிமைகளை மீட்டெடுக்க அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மே 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் பல கட்ட போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டன. அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆதரவோடு சாலைமறியல், ரயில் மறியல், முழு அடைப்பு என்று காவரி வாரியத்திற்கான போராட்டங்கள் மார்ச் 30ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 7ம் தேதி முதல் திருச்சி முக்கொம்பில் இருந்து ஸ்டாலின் காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் தொடங்கி நேற்று கடலூரில் முடிந்த இந்தப் பேரணி அங்கிருந்து வாகன பேரணியாக சென்னை ஆளுநர் மாளிகை வந்து ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்டாலின் நேற்று இரவே சென்னை திரும்பியுனார். இந்நிலையில் காவிரிக்காக அடுத்த கட்ட போராட்டத்தை எவ்வாறு முன் எடுத்துச் செல்வது என்று ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் ஆளுநரை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.