திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி தொடரும் - மதிமுக
வரும் காலங்களில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக திமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணி வருங்காலங்களிலும் தொடரும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுகஉயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தாயகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்க திமுகவுடனான கூட்டணியை தொடர்வது, ஓகி புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பதினொரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மாநில சுயாட்சி பாதுகாப்பு
தொடர்ந்து மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், திராவிட கொள்கைகளை அழிக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்க திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவோடு வரும் காலங்களிலும் கூட்டணி தொடரும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலில் முறைகேடு
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து இனி வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசிய பேரிடர் பாதிப்பு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகள் போதிய அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும், கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

விவசாயிகள் பாதுகாப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் , கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2550 என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000மாக தீர்மானிக்க வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

முத்தலாக் திருமணவிலக்கு
ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமிய திருமண சட்டங்களை மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் பா.ஜ.க. அரசு, இஸ்லாமிய இயக்கங்களின் கருத்தினை அறிய முற்படாமல், முத்மூதலாக் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

பட்டாசு ஆலைகளுக்கு சிறப்பு சட்டம்
கடந்த இரண்டு வார காலமாக பட்டாசுத் தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.












Click it and Unblock the Notifications