மருத்துவர் கனவுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா விண்ணுலகம் சென்ற நாள் இன்று...
சென்னை: மருத்துவராகும் கனவுடன் உச்சநீதிமன்றம் வரை நீட்டுக்காக போராடிய அரியலூர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு முதல்முறையாக நடத்தப்பட்டது. இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்தும் அதை மத்திய அரசு கேட்டுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு மன்றாடியும் பயனில்லை.

மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு
தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்த போது கூறிருந்தார். இதையடுத்து தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

உச்சநீதிமன்றம்
இதனிடையே அரசின் தீர்மானத்தை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். அப்போது பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார்.

பேரிடி
இதையடுத்து நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மருத்துவர் கனவுடன் இருந்த அனிதாவின் தலையில் பேரிடியை இறக்கியது.

முதலாம் ஆண்டு
இதையடுத்து அவர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நீட் எனும் அரக்கன் உருவாகாமல் இருந்திருந்தால் அந்த மாணவி இன்று தனது மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு முடித்திருப்பார். ஆனால் இன்றோ அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications