ஜெ. சைகை காட்டுகிறார்.. அதற்கேற்ப செயல்படுகிறார் சபாநாயகர்... விஜயகாந்த் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை: முதல்வர் ஜெயலலிதாவின் கைவிரல் சைகையின் அடிப்படையில் சட்டசபை சபாநாயகர் தனபால் செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகநலத்திட்ட விழா நடை பெற்றது. அக்கூட்டத்தின் தொடக்கத்தில் மெக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:-
டெங்கு பாதிப்பு...
தமிழகமெங்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகிக் கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலை...
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால், இதை காவல்துறை மூலம் தமிழக அரசு மறைக்கிறது.
சபாநாயகர்...
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தனது கை விரல்கள் மூலமான சைகையின் அடிப்படையில்தான் சபாநாயகர் தனபால் செயல்படுகிறாரே தவிர அவர் தன்னிச்சையாகவோ, நடுநிலையுடனோ செயல்படவில்லை.
கூட்டணி...
சட்டசபைத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து மாநாடு நடத்தி அதன் மூலம் முடிவெடுக்கப்படும்'' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கை தேவை...
அதனைத் தொடர்ந்து, பிரேமலதா பேசுகையில், "பல்வேறு பயிற்சிகளை முடித்து பணிக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் குறித்து தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
புள்ளி விபரம்...
தமிழகத்தில் 218 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக் கின்றது. நேர்மையான அலுவலர்கள் மிரட்டப்படுகின்றனர். ஆலங்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் (அதிமுக) கொலை சம்பவத்தை 5 ஆண்டுகளாகியும் அதன் உண்மைதன்மையை அதிமுக அரசும் மறைக்கிறது. தேமுதிக ஆட்சியில் இக்கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வரும்'' என்றார்.