அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கிறார் முதல்வர் - போராட்டக்குழு
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார் என்று நம்புவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமைச் செயலகத்தில் அவினாசி அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டத்தை நிறைவேற்றுதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி, அத்திக்கடவு திட்டத்தின் அவசியத்தை முதல்வரிடம் விளக்கியதாக கூறினார்.

3 மாவட்டங்கள்
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக கூறினார். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் உறுதி
கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு திட்டத்துக்காக போராடி வருவதாக கூறிய போராட்டக்குழுவினர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவத்தை முதல்வர் உணர்ந்துள்ளதாகவும், அந்த திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு திட்டத்தை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டு கால கனவு
அத்திக்கடவு - அவினாசி திட்டம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டம். இதை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல மக்களிடையே எழுந்துள்ளது. எனவேதான் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என்று போராட்டக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications