அதெப்படி திருமாவை ஸ்ரீதர் தப்பா பேசலாம்.. டவர் மீதேறி விடிய விடிய போலீசாரை திணறடித்த விசிக பிரமுகர்
திருப்போரூர் விசிக பிரமுகர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்
திருப்போரூர்: "அது எப்படி திருமாவை தப்பாக பேசலாம்.. எல்லாரும் வேடிக்கை பார்க்கறீங்க? ஸ்ரீதரையும், புருஷோத்தமனையும் கைது செய்யுங்க" என்று விசிக பிரமுகர் ஒருவர் ராத்திரி நேரத்தில் டவர் மீது ஏறி கொண்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
கேளம்பாக்கம் அடுத்த கோவளத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்.. 45 வயதாகிறது.. இவர் விசிகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர். இவர் சம்பவத்தன்று, திடீரென்று நைட் நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது கடகடவென ஏறினார்.
உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு "அனுமன் சேனா ஸ்ரீதரும், கேளம்பாக்கத்தில் நடிகை குஷ்புவை கைது செய்தபோது, அங்கு வந்த பாஜ பிரமுகர் படூர் புருஷோத்தமனும் விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசினார்கள்.. அவர்கள் 2 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால், தற்கொலை செய்ய போகிறேன்" என்று முழக்கமிட்டார்.
இதை பார்த்து பதறி போன அந்த பகுதியினர் உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து டவர் மீது ஏறிய ஸ்ரீதரிடம் செல்போன் மூலம் பேசினர்.. ஆனாலும் அவர் கீழே இறங்கவே இல்லை.. இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாத போலீசார், சிறுசேரி தீயணைப்பு நிலைய மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து வந்து டவரில் ஏற முயன்றனர்.
அப்போதும் ஸ்ரீதர் கேட்கவில்லை.. கீழே இறங்க முடியாது என்று கலாட்டா செய்தார்.. இதன்பிறகு, விசிக காஞ்சிபுரம் மண்டல செயலாளர் விடுதலைச் செழியன், ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை கிட்டு, வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
ஸ்ரீதரிடமும் செல்போனில் பேசி போராட்டத்தைக் கைவிடுமாறு சொன்னார்கள்.. அப்போதும் ஸ்ரீதர் அவர்கள் பேச்சை கேட்கவில்லை. யாராவது மேலே வந்தால் கீழே குதித்துவிடுவேன்... திருமாவை அவங்க 2 பேரும் எப்படி தப்பாக பேசலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், கேளம்பாக்கம் போலீசார், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும், பாஜக பிரமுகர் புருஷோத்தமன் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் உறுதி தந்தனர்.. அதன்பிறகே ஸ்ரீதர் கீழே இறங்கி வந்தார். இதனால் நள்ளிரவையும் தாண்டி பரபரப்பு அந்த பகுதியில் நீடித்தது.