Exclusive: தமிழகத்தில் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி.. 1.5 லட்சம் பூத் நிர்வாகிகள்.. பாஜக அதிரடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி கொள்ளாத ஒரு மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பூத் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று உளவுத்துறை வட்டாரங்கள் மத்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில், வட இந்தியாவில் தான் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முடிந்தது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், வட மாநிலங்களில் கடந்த முறை போல வெல்லமுடியாது, கணிசமான தொகுதிகளை இழக்க வேண்டி வரும் என்று அக்கட்சி மற்றும் உளவுத்துறை ஆகியோர் நடத்திய ரகசிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. இதையடுத்து தென்னிந்தியாவிலும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் ஆட்சியை, பிடிக்க முடியும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி தலைமை மிகவும் தெளிவாக உள்ளது. 39 லோக்சபா தொகுதிகளிலை கொண்ட தமிழகத்தின் மீது பாஜக தலைமை கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளது.
பூத் நிர்வாகிகள்
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கடந்த முறை சென்னை வந்தபோது, சுமார் 15,000 கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் அளவில் நிர்வாகிகளை அதிகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 60000 பூத்துகள் இருக்கின்றன. எனவே, குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் பூத் நிர்வாகிகளை உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட்டு சென்றிருந்தார். இதையேற்று பாஜக நிர்வாகிகள் செயல்பட்டதன் விளைவாக 1.5 லட்சம் பூத் பணியாளர்களை உருவாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட பேரணி
இந்த நிலையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாரதிய ஜனதா கட்சியின் பேரணிக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி பங்கேற்கும் அந்த பேரணியின்போது ஒன்றரை லட்சம் பூத் நிர்வாகிகளை முன்னிறுத்தி பேரணியை களைகட்ட வைப்பது பிற கட்சிகளை திகைக்க செய்வது ஆகியவை யுகங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
அழகிரி மீது ஒரு கண்
இதன்மூலம் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தேர்தல் வெற்றிக்கு உதவும் என்ற ஒரு சமிக்ஞையை தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுக்கு பாஜக கடத்த உள்ளது என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது பாஜக இலக்கு. அத்துடன் திமுகவில் அழகிரி சேர்த்துக்கொள்ளப்படாவிட்டால் அவரையும் பாஜக கட்சிக்குள் இணைப்பது, அல்லது அவரை பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைப்பது, தேர்தல் பணியாற்ற வைப்பது என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
புதிய தலைமை
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 15ஆம் தேதிக்கு முன்பாக தமிழகம் வருவதாக தெரிகிறது. அதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி யார் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது உறுதி செய்யப்பட்டு விடும் என்று சென்னையில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலின் போது பல முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய பிரதான இரு கட்சிகளும் ஆறுக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிலுமே இப்போது புதிய தலைமைகள் பதவிக்கு வந்துள்ளதால், பழைய மாதிரி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.