தமிழகத்தில் அமித்ஷாவின் 'ஜாதி' பார்முலா போணியாகுமா? எதிர்பார்ப்புடன் பா.ஜ.க.
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளை மீறி காலூன்றி விடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டுகிறது.. இதன் ஒரு பகுதியாக ஜாதி கட்சிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது பா.ஜ.க.
இந்தியாவிலேயே தமிழகம்தான் மதவாதத்தை அனுமதிக்காத மண்... இந்த மண்ணில் மதவாத ஆரியத்துக்கு எதிரான திராவிட சித்தாந்தம் என்பது வேர்பிடித்த ஒன்றாக இருக்கிறது. மதவாத கட்சிகளை என்னதான் திராவிடக் கட்சிகள் அவ்வப்போது அரவணைத்தாலும் அந்த சக்திகளால் தமிழகத்தில் வேர்பிடிக்கவே முடியாமல் இருக்கிறது.
இதனால்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரை தங்களது மதவாத செயல்பாடுகளுக்கு துணையாக அழைத்துக் கொள்கிறது இந்துத்துவாவும் அதன் அரசியல் கட்சியான பாரதிய ஜனதாவும். இதன் ஒரு கட்டமாகவே தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.
வலை வீசும் பா.ஜ.க.
என்னதான் தமிழிசை சவுந்தரராஜன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் அவர் மதவாத கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் பாரதிய ஜனதாவுக்கு அது கை கொடுக்கவில்லை.. இருந்தபோதும் பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதால் ஜாதிய கட்சிகளை வளைத்துப் போட்டுப் பார்க்கலாம் என கோதாவில் குதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் கையிலெடுத்த ஜாதிய அஸ்திரத்தை இங்கே வீசிப் பார்க்கலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் ப்ளான். ஆனால் தமிழகம் அப்படியொன்றும் ஜாதிய ரீதியாக உடனடியாக அணிவகுத்து பாரதிய ஜனதா பக்கம் போய்விடாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சிக்குமா ஜாதி கட்சிகள்?
மதுரையில் நடைபெற்ற தேவேந்திரர் அறக்கட்டளை என்கிற என்.ஜி.ஓ. அமைப்பின் கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டிருக்கிறார். இதே கூட்டத்தில் இந்துத்துவா குழுக்களின் ஆலோசகரான ஆட்டிடர் குருமூர்த்தியும் கலந்து கொண்டிருக்கிறார். இக்கூட்டத்தில் 'ஜாதிகள்' அவசியம் தேவை என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திராவிட இயக்கங்கள், கட்சிகளின் அடிப்படை கொள்கையான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுடன் காத்துக் கொண்டிருக்கும் ஜாதிய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து அந்த கோரிக்கைகளை நிறைவேற்றவும் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
இப்படியும் ஒரு ப்ளான்
மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைத்தால் நாடார் சமூகம் மகிழும்; வீரன் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியிட்டால் யாதவர் சமூகம் ஆதரவளிக்கும்; மத்திய அரசுப் பட்டியலில் முற்படுத்தப்பட்டோராக இருக்கும் ரெட்டியார் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தால் ரெட்டியார் சமூக வாக்குகளை அள்ளலாம் என்பதெல்லாம் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த செயல்திட்டங்கள்.
தோல்விதான் வரலாறு..
இருப்பினும் தமிழகத்தில் அத்தனை ஜாதி சங்கங்களையும் இணைத்துக் கொண்டு சாதிக்கப் போகும் கூட்டணி என வீரவசனம் பேசியபடி தேர்தல் களத்துக்குப் போன தி.மு.க. மண்ணைக் கவ்வ நேரிட்டது என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வரலாறு; என்னதான் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தினாலும் திராவிட கட்சிகளுக்கான வாக்கு வங்கிகளில் பலத்த சரிவு ஏற்பட்டுவிடவில்லை என்பதும் யதார்த்தம்..
முடியாது..
இந்த யதார்த்தம் அதாவது திராவிட கட்சிகள் தங்களது பலமான வாக்கு வங்கியில் மிகப் பெரிய சரிவை சந்திக்கிற போதுதான் அதூம் குறுக்குசால் நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் பாரதிய ஜனதாவால் தமிழகத்தில் தலைதூக்கிட முயற்சிக்க முடியுமே தவிர ஜாதிகட்சிகளை வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று தண்ணீர்குடித்தாலும் தமிழகத்தில் கரையேறவே முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.