கூடங்குளம் அருகே 50 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சால் பதற்றம்- போலீஸ் குவிப்பு!!
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் மீனவர் குழுக்களிடையேயான மோதலில் 50க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் மீனவர்களின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது உண்டு. இம்மோதல்களின் போது சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 7-ந் திருமணம் ஒன்று நடைபெற்ற போது இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கியுள்ள்னார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். இருதரப்பினும் சமாதானமும் ஆகவில்லை.
இந்நிலையில்தான் இன்று அதிகாலையில் கூத்தங்குழி கிராமத்தில் ஒரு பிரிவினர் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. காலை 6 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது.
இப்படி மாறி மாறி 50க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டு வெடித்து சிதறியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. சில கட்டிடங்கள் சேதமடைந்தன. பலர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
இதனால் அங்கு போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவங்களால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications