ரூ.45 லட்சம் மோசடி - முகாந்திரம் இருந்தால் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிய ஹைகோர்ட் சிக்னல்
சென்னை: தமிழக அமைச்சர் காமராஜுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பண மோசடி புகார் மீது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் ‘ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகின்றேன். சென்னை மைலாப்பூரில் 2009ஆம் ஆண்டு வீடு ஒன்று வாங்கினேன். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய மறுத்தார்.
அப்போது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் தன் உறவினர் அதிமுக ராஜ்யசபா எம்பி என்றும், மைலாப்பூர் வீட்டை காலி செய்து தருவதாக ரூ.15 லட்சத்தை 2 தவணையாக வாங்கினார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை.
இதையடுத்து அவரது உறவினரான ராஜ்ய சபா எம்பியாக இருந்து தற்போது அமைச்சராக உள்ள காமராஜை சந்திக்க, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது காமராஜ், வீட்டை காலி செய்து தருவதாகவும், அதேநேரம் தமிழக சட்டசபை தேர்தலில் தனக்கு நன்னிலம் தொகுதியில் ‘சீட்' கிடைத்திருப்பதாகவும், தேர்தல் செலவுக்கு ரூ.30 லட்சம் தருமாறு என்னிடம் கேட்டார். நானும் கொடுத்தேன். அவர் தேர்தல் வெற்றிப் பெற்று தற்போது அமைச்சராக உள்ளார்.
அதன்பின்னர் அமைச்சர் காமராஜையோ, ராமகிருஷ்ணனையோ என்னால் தொடர்பு கொள்ள முடியாவில்லை. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தேன். என்னுடைய புகார் மீது திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவானந்தம் விசாரணை நடத்தினார். இதன்பின்னர், அமைச்சரின் ஆட்கள் என்னை வீட்டுக்கு வந்து தாக்கினர். இதனால், உயிருக்கு பயந்து நான் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றேன். எனவே, அமைச்சர் காமராஜ் மீது நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யும்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திங்கள்கிழமை இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் விசாரணைக்காக வருகிற 30ம் தேதி மன்னார்குடி டிஎஸ்பி முன்பு நேரில் ஆஜராக வேண்டும். அப்போது, மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பை துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து டிஎஸ்பி விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' கூறியுள்ளார்.
ஆளும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் இது போதாத காலம் போலும். கொலைவழக்கு, பாலியல் வழக்கு என ஏற்கனவே இருவர் சிக்கியுள்ள நிலையில் மற்றொரு அமைச்சரான காமராஜ் மீது பணமோசடி புகார் எழுந்துள்ளது. காமராஜ் தப்புவாரா? கைதாவாரா என்பதுதான் ஏக எதிர்பார்ப்பாக உள்ளது.