குளத்தில் மண் எடுக்க லஞ்சம்... வருவாய் ஆய்வாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்
குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள குளத்தில் மணல் எடுக்க லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்சஒழிப்பு துறை கைது செய்தது.
குமரி மாவட்ட குளங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொட்டல் அருகே உள்ள சம்பா குளத்தில் மண் எடுக்க விவசாயி தங்கவேல் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அவர் குளத்து மண்ணை டிராக்டரில் அள்ளி அவரது விவசாய நிலத்துக்கு கொண்டு செல்ல பாபு என்பவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி சம்பாகுளத்தில் மண் எடுத்து தங்கவேலின் விவசாய நிலத்தில் போட்டு வந்தார்.
இந்நிலையில் மாலை மண்ணை டிராக்டரில் ஏற்றிச் சென்றபோது நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஷ் வழிமறித்து மணல் எடுப்பதற்கான அனுமதி ரசீதை கேட்டார். அதை காட்டிய பின்பும் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என கூறினார்.
இதுபற்றி பாபு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரைப்படி பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்த சதீஸுக்கு இரவு பணம் தர ஒப்புக் கொண்டார். நேற்று அந்த பணத்தை நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் வைத்து பெற்றுக் கொள்வதாக பாபுவிடம் ஆனந்த சதீஷ் கூறினார்.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய பணத்துடன் பாபு, கோர்ட்டு ரோட்டில் இரவு காத்திருந்தார். அங்கு சாதாரண உடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீஸார் மறைந்து நின்றனர்.
அப்போது அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் ஆனந்தசதீஷிடம் பாபு பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் நடுரோட்டில் ஆனந்த சதீஷை மடக்கி பிடித்தனர்.
இதுபற்றி வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.