பஸ்ஸுக்குள் "குப் குப்"... கலெக்டருக்கு போட்டோ அனுப்பி கண்டக்டருக்கு ”ஆப்பு” வைத்த பயணிகள்!
சேலம்: சேலத்தில் பேருந்துக்குள் சிகரெட் பிடித்த கண்டக்டரைப் புகைப்படம் எடுத்து கலெக்டருக்கு அனுப்பி லைசென்சினை ரத்து செய்ய வைத்துள்ளனர் பஸ் பயணிகள்.
சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி கடந்த மே 25 ஆம் தேதி தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அப்போது பஸ்சின் கண்டக்டரான ஏற்காடு முளுவி பகுதியை சேர்ந்த வித்யாபதி, பயணிகள் அருகே நின்று புகை பிடித்தார். இதனை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து ஈமெயில் மூலம் கலெக்டருக்கு அனுப்பினார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி வித்யாபதியின் கண்டக்டர் லைசென்சை வட்டார போக்குவரத்து அதிகாரி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி கூறுகையில், ‘'பஸ்சில் புகை பிடித்தல், செல்போன் பேசியபடி பஸ் ஓட்டினால் கண்டக்டர், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.