ஆர்.கே. நகரில் கொட்டும் பண மழை.. 29 லட்சம் பறிமுதல்.. பணப்பட்டுவாடா செய்த 143 கைது
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்துள்ள நிலையில், 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் எந்த சம்பவம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா செய்த 143க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெப் கேமரா
பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க 100க்கும் மேற்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பாதி எங்குள்ளது என மக்களுக்கு தெரியாது. அதன் வழியாக பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு தீவிரம்
இரு சக்கர வாகனம் மூலம் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தெருத்தெருவாக சுற்றி வருகின்றனர். 30 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றனர்.
வெளியூர் நபர்கள்
ஆர்.கே. நகரில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும். இதுவரை அனுமதி பெறாமல் வந்த 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
இனிமேல் அனுமதி இல்லாமல் வாகனங்கள் வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். தேர்தல் முடியும் வரை உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படமாட்டாது. அவற்றை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கார்த்திகேயன் கூறியுள்ளார்.