வெள்ள பாதிப்பு.. நாளை 9 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது.
வட கிழக்குப் பருவ மழை இந்த முறை தமிழகத்திற்கு மிகப் பெரிய கொடையாக மட்டுமல்லாமல் துயரத்தையும் ஏற்படுத்தி விட்டது. காரணம், தமிழகத்தின் பல பகுதிகளை இந்த மழை வெள்ளக்காடாகி விட்டது.
தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன மழைக்கு தமிழகத்தில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் காரணமாக ரூ.8,481 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், முதல் கட்டமாக ரூ.2000 கோடி உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். மேலும், வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு அனுப்ப வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உடனடியாக தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக முதல் கட்டமாக ரூ.940 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தது.
நிவாரண நிதி அளித்ததை தொடர்ந்து மத்திய குழுவை நாளை தமிழகம் அனுப்பவும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மத்திய உள்துறை இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 9 பேர் அடங்கிய சிறப்பு குழு தமிழகம் வருகிறது.
இக்குழுவினர் முதலில் சென்னை வருகின்றனர். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு வெள்ளம் பாதித்த விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்வர்.
ஆய்வுக்குப் பின்னர் மத்திய நிதியமைச்சகத்திடம் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
மத்திய குழுவில் இடம் பெற்றுள்ளோர் விவரம்:
டிவிஎஸ்என் பிரசாத் (தலைவர்), மீனா, சச்தேவா, ஜர்தார், ரோஷ்மி, ஸ்மித் கோயல், நெகரா, கிருஷ்ணன் உன்னி, அரவிந்த் ஆகியோர்.