தேமுதிக அறக்கட்டளையில் ரூ500 கோடி மோசடி... விஜயகாந்தை கோர்ட்டுக்கு இழுக்கும் சந்திரகுமார் கோஷ்டி
கோபி: தேமுதிக அறக்கட்டளையில் 11 ஆண்டுகளில் ரூ500 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளது; இது தொடர்பாக வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று மக்கள் தேமுதிக தலைவர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் கோபியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் வி.சி.சந்திரகுமார், மேட்டூர் பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை கேட்காமல் விஜயகாந்த் தன்னிச்சையாக முடிவு எடுத்து, மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறி வந்த விஜயகாந்த், இந்த முடிவை எடுத்ததன் மூலம் ஒரு சீட் கூட பெற முடியவில்லை.

பணத்தை திருப்பி கொடுங்க...
தேர்தலில் கட்சியினர் விருப்ப மனு செய்யும் போது ரூ.6 கோடியும், தேர்தல் நிதியாக ரூ.14 கோடியும் கொடுத்துள்ளனர். இதை அப்படியே விஜயகாந்த் திருப்பி கொடுக்க வேண்டும். பணத்தை கட்சிக்காக கொடுத்தவர்கள் அதை திருப்பி கேட்டு, சென்னையில் உள்ள விடுதிகளில் காத்து கிடக்கின்றனர்.

அதிமுகவுக்காக தேமுதிக விற்பனை
தே.மு.தி.க.வை யாரிடமும் அடமானம் வைக்க மாட்டேன் என்று கூறி வந்தார் விஜயகாந்த். ஆனால் சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வுக்காக கட்சியையே விற்று விட்டார்.

3 லட்சம் பேர் விலகல்
தமிழகம் முழுவதும் விஜயகாந்தின் செயல்பாடு பிடிக்காததால் சுமார் 3 லட்சம் பேர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள். இவர்களில் பலர் மக்கள் தே.மு.தி.க.வில் இருக்கிறார்கள். வருகிற 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் விழாவில் மக்கள் தே.மு.தி.க.வில் உள்ளவர்கள், தே.மு.தி.க.வில் விஜயகாந்த் குடும்பத்தை தவிர அனைவரும் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொள்கிறார்கள்.

ரூ500 கோடி மோசடி
தேமுதிக அறக்கட்டளையில் (தேமுதிகவுக்கான கட்சி நிதி தேமுதிக அறக்கட்டளை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது) கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.168 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இல்லையென விஜயகாந்த் மறுத்தால் வெள்ளை அறிக்கை தரட்டும். 11 ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக அறக்கட்டளையில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு சந்திரகுமார், பார்த்திபன் ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications