செம்பரம்பாக்கம் ஏரி திறப்புல 'எது உண்மை'ன்னு சொல்றோம்னு கடைசி வரைக்கும் சொல்லலையே...
சென்னை: மனித சக்தியைத் தாண்டிய மகா சக்தி எங்கள் அம்மா... அம்மாவின் ஆட்சியில் மாதம் மும்மாரி பெய்கிறது.... திமுக ஆட்சியில் மழையே பெய்யாது வறட்சி நிவாரணம்தான் கொடுப்பாங்க... அம்மா ஆட்சியிலதான் வெள்ள நிவாரணம் கொடுக்கிறாங்க... என்ன இது என்று யோசிக்கிறீர்களா? இது எல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதன் உண்மை நிலவரம் பற்றி ஜெயா டிவியில் பேசியவர்கள் கூறியதுதான்.
நூற்றாண்டுகளில் பெய்யாத மாமழை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களை மூழ்கடித்தது. டிசம்பர்1, 2ம் தேதிகளில் சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் ஒரே நாளில் 500 மி.மீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிய, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து விநாடிக்கு ஆயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதனால் அடையாறு ஆற்றில் பெருகிய வெள்ளம் சென்னை புறநகர் பகுதிகளை மட்டுமல்லாது நகர் பகுதிகளையும் மூழ்கடித்தது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதில் சரியான அணுகுமுறை இல்லை என்று ஒரு செய்தி வெளியாகவே, அதை பின்பற்றி அரசியல் கட்சியினரும் அறிக்கை வெளியிட ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் அனல் பறந்தது. எல்லாரும் சொல்வது பொய்... நாங்க உண்மையை சொல்றோம் என்று ஜெயா டிவியில் 'எது உண்மை' என்ற பெயரில் கடந்த ஞாயிறன்று 6 பேர் அமர்ந்து வட்ட மேஜை மாநாடு போல பேச... நாமும் ஆர்வத்தோடு கேட்க அமர்ந்தோம்.
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறந்ததில் இருந்து... கடலூரில் வெள்ளம் வந்தது வரைக்கும் பேசி தீர்த்தவர்கள் கடைசி வரைக்கும் எதிர்கட்சியினர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை சொல்லவேயில்லை என்பதுதான் உண்மை.
தண்ணீர் திறக்க அனுமதி மறுப்பு
கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் 500 மி.மீ வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதன்பேரில் கடந்த 26ம் தேதி சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனருக்கு சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சண்முகம் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், கனமழை வாய்ப்பிருப்பதால் சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விட ஒப்புதல் தருமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் ஏரி திறப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு
தலைமைச் செயலாளருக்கு கடிதம்
இதை தொடர்ந்து, சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகம் தரப்பில் அரசு செயலாளர் பழனியப்பன் மூலமாக தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு கடந்த 28ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். ஆனால், அந்த கடிதத்திற்கு தலைமை செயலாளரிடம் இருந்து பதில் வராததால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரி
இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக, அன்றைய தினத்தில் 49 செ.மீ மழை சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பதிவானது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 1ம் தேதி காலை நிலவரப்படி 2,700 மில்லியன் கன அடியாகும், மதியம் 2 மணி நிலவரப்படி நிலவரப்படி 2,900 மில்லியன் கன அடியாக உயர்ந்து கொண்டே இருந்தது.
அபாய கட்டத்தில் ஏரி
இதனால் தலைமை பொறியாளர் சண்முகம் தரப்பில் மீண்டும் ஏரி உடையும் அபாயம் இருப்பதால் உடனடியாக அனுமதி அளிக்கும்படி பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பனிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகே செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதற்குள் 3,100 மில்லியன் கன அடியை நீர்மட்டம் தாண்டிச்சென்றது.
35000 கன அடி நீர் வெளியேற்றம்
இந்த அவசர கால சூழ்நிலையில் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 3 மணிக்கு மேல் 10 ஆயிரம் கன அடியும், தொடர்ந்து 20 ஆயிரம் கன அடியாகவும், இரவு 10.30 மணியளவில் 30 ஆயிரம் கன அடியாகவும், 2ம் தேதி காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்து கூடுதல் உபரி நீர் திறந்து விட்டதன் விளைவாகவும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 90 ஏரிகளில் 56 ஏரிகள் நிரம்பி உபரி நீர் அடையாற்றில் கலந்ததாலும் 70 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
இந்த வெள்ளத்தால் பெருங்களத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதில், நூற்றுக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். 10 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரி திறக்கப்படுவதற்கு தாமதம் செய்த காரணத்தினாலே வெள்ளம் வந்தது என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.
உண்மை சொல்ல வந்தவர்கள்
நாங்களும் விவாத நிகழ்ச்சி நடத்துவோம்ல என்று கூறி ஜெயாடிவியில் அதிமுக ஆதரவாளர்களான, மாஃபா பாண்டியராஜன், நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் மருது அழகுராஜ், இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு. தமிழரசன், சமூக ஆர்வலர் கிஷோர், அதிமுகவைச் சேர்ந்த சங்கர்தாஸ், முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் வீரப்பன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான மாத்ருபூதம் ஆகியோர் விவாதம் செய்தனர்.
மழையை கணிக்க முடியுமா?
500 மி.மீ மழை பெய்யும் என்று பிபிசி வானிலை சொல்லியும் தண்ணீரை திறக்காதது ஏன் என்பது எதிர்கட்சியினரின் கேள்வி, அதற்கு பதில் சொன்ன முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் வீரப்பனோ, எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்க முடியாது. இது விவசாயத்திற்கான ஏரி கிடையாது சென்னை மக்களின் குடிநீர் ஆதரமே இந்த ஏரிதான் இந்த ஏரி தண்ணீரை திறப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்றார்.
புரியாமல் பேசுகிறார்கள்
செம்பரம்பாக்கம் ஏரியில் 24 மதகுகள் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 33000 கனஅடிதான். அதற்கு மேல் வெளியேற்ற முடியாது. அணை வழியவே இல்லை. இரவு பகலாக கண்காணித்து வந்த பொறியாளர்கள், மழை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீர் திறப்பை அதிகரித்தனர். பெரிய மழை பெய்து நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பியதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 33000 கனஅடி தண்ணீர்தான் திறந்து விடப்பட்டது என்று கூறியதோடு அடையாறில் டிசம்பர் 2ம் தேதி 72000 கனஅடிநீர்தான் வெளியேறியது என்றார்.
தொற்றநோய்கள் பரவலையே
இவ்வளவு பெரிய மழை பெய்தும், அரசு எடுத்த போர்கால நடவடிக்கையினாலும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தியதனாலும் தொற்றுநோய்கள் எதுவும் பரவவில்லை என்று கூறினார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்.
ஏரி தண்ணீரில் அரசியல்
முன்பே ஏன் திறக்கவில்லை என்று எல்லாரும் கேட்கலாம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடப்பட்டது மட்டுமே வெள்ளம் வரவில்லை என்பது முன்னாள் பொறியாளரின் கருத்து. தேர்தல் வரப்போவதால் இதை அரசியலாக்குகின்றனர்.டிசம்பர் 1, 2 கனமழையால்தான் அதிகம் நிரம்பியது தண்ணீர் திறக்கப்படா விட்டால் ஏரி உடைந்து சென்னை அழிந்திருக்கும் என்று கூறினார்.
மாஃபா பாண்டியராஜன்
மிகப்பெரிய மழை வெள்ளத்தை 2005 மும்பை வெள்ளத்துடன் ஒப்பிடலாம் மூன்று கட்டமாக இங்கு மழை பெய்தது. மும்பையில் 50 சதவிகிதம் கூடுதலாக பெய்த மழைக்கே 1000பேர் உயிரிழந்தனர். சென்னையில் அடையாறு கரையோரம் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உயிர்சேதம் தடுக்கப்பட்டதோடு, பொருட்சேதம் கட்டுப்படுத்தப்பட்டது என்றார். அரசு அதிகாரிகளும், நிவாரண மீட்பு பணியில் ஈடுபட்டவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர் என்றார்.
எல்லாம் சரியாகத்தான் நடந்தது
மழை வெள்ளம் பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கோபத்தை அரசை நோக்கி திருப்புகின்றனர். அது அவர்களுக்கு எதிராகவே திரும்புகிறது என்றார் மாஃபா பாண்டியராஜன். மக்களையும், அரசையும் தூரப்படுத்த முயற்சி செய்கின்றனர். இளைஞர் சக்தி ஒருங்கிணைக்கப்பட்டது. அதை கொச்சைப்படுத்துகின்றனர். அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் என்றும் கூறி விவாத நிகழ்ச்சியை தாங்கி நிறுத்தினார்.
மக்களை காத்த மகா சக்தி
அதிமுக உறுப்பினரோ, திருப்பாவையை பாடி கடைசியில் மகாசக்தி என்கிற ரீதியில் முடித்தார். சீரியசாக போகும் விவாத நிகழ்ச்சியில் காமெடியும் கொஞ்சம் வேண்டும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? மழை பெய்த போது கேரளாவில் ஸ்டாலின் உல்லாசமாக ஓய்வெடுத்தார் என்றும் பேச்சுவாக்கில் போட்டு தாக்கினார். வெள்ளத்திற்கு விசாரணை கேட்ட ஒரே தலைவர் கருணாநிதிதான் என்றும் ஒரே போடாக போட்டார்.
செயற்கை பேரிடரா?
இது செயற்கை பேரிடர் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வந்த செ.கு. தமிழரசன், வெள்ள நிவாரணம் பற்றி முதல்வர் அறிவிக்கும் முன்பே அறிக்கை வெளியிட்டவர் கருணாநிதி. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் இருக்கின்றனர். எல்லாத்திற்கும் மாநில அரசு காரணமா? கடலூர் பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரிதான் காரணமா? மழைதான் காரணம் 100 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பெய்தது. அதுதான் வெள்ளத்திற்கு காரணம் என்றார். ஒருவாரம் கழித்து வெளியே வந்து போர்கால நடவடிக்கை பற்றி பேசுவதா? குறுக்குச் சால் ஓட்டுகின்றனர். தலைவர் படமின்றி ஏன் கொடுக்கக் கூடாது.தேர்தல் வரப்போகிறது. பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சிக்கு எதிராக துரும்பை தூண் ஆக்குகின்றனர் என்று கூறினார்.
உண்மையை சொல்லலையே
மக்களை நேசிக்கக் கூடிய முதல்வர் வெள்ளத்தைப் பற்றி வாட்ஸ் அப் உரையில் மக்களுக்கு தெளிவாக விளக்கியுள்ளார். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்காங்கப்பா...வதந்தி பரப்புறாங்களேப்பா... இலவச பேருந்து வசதி கொடுக்கப்பட்டது.... புயலினும் வேகமாக மீட்பு நிவாரண பணிகள் நடந்தன. இந்த மழை மூலம் எங்கள் முதல்வர் அம்மா மனித சக்தி கடந்த மகா சக்தி என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று விவாதத்தை முடித்தனர். அதெல்லாம் சரிதான். செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்தது ஏன் என்பது பற்றிய உண்மையைத் தவிர எல்லாவற்றையும் பேசி முடித்தனர் என்பதுதான் உண்மை.