மாணவன் சூரஜ் மீதான தாக்குதல் விவகாரம்...ஐஐடி வளாகத்தில் 2வது நாளாக போராட்டம்!
ஐஐடி மாணவன் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து சக மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : ஐஐடியில் ஆராய்ச்சி வகுப்பு படித்து வந்த சூரஜ்ஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 28ம் தேதி இரவு ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவன் சூரஜ்,ஐஐடி வளாக கேன்டீனில் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதில் கண் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் உடல்நலம் தேறி வருகிறது. எனினும் சூரஜை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றும் ஐஐடி வளாகத்தினுள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டீன் சிவகுமார் மாணவர் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க டீன் மறுத்ததால் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்தனர்.
மாணவர் சூரஜின் மருத்துவ செலவை ஐஐடி நிர்வாகமே ஏற்க வேண்டும், சூரஜை தாக்கிய மாணவர்களை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றும் ஐஐடி வளாக நுழைவு வாயில் முன்பு திரண்ட மாணவர்கள் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.