சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டிய விவசாயிகள்... விவசாயம் செழிக்க வழிபாடு
சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் பொன்னேர் பூட்டி உழுதனர்.
தூத்துக்குடி: சித்திரையில் பொன்னேர் கட்டி , கோடை உழவை முறையாக அடித்தால் நிச்சயம் மகசூல் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இதனடிப்படையில் இன்றும் தென் மாவட்டங்களில் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
சித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் உழவன் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார் "
என்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த சித்திர மேழி வைபவம் மகத பேரரசின் தலையாய அரசு விழா. அரசன் நடத்தும் விழாவை இன்றுவரை கம்போடியா அரசு செய்து வருகிறது
இதை நமது இலக்கியங்களில் மட்டுமில்லை புராணங்களிலும் பார்க்கலாம். சூரிய குல க்ஷத்திரியர் ஜனக மாஹராஜவால் இதே போல் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டி உழும்போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பால் ஆகையால்தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள். இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் உரியது பாரம்பரியமாக தென் மாவட்டங்களில் சித்திரை முதல் பொன்னேர் பூட்டி உழுது உழவுத் தொழிலை தொடங்குகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் கிராம விவசாயிகள் தங்களின் வீடுகளில் இருந்த காளைகளை அலங்கரித்து கலப்பையினை நன்றாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்தனர். பின்னர் காளைகளில் பூட்டி இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி தங்களின் நிலத்தில் மூன்று முறை உழுதனர். காளைமாடுகளும் ஏர் கலப்பையும் இல்லாதவர்கள் டிராக்டர் கொண்டு உழுதனர்.இதனையடுத்து காளைகளுக்கும், கலப்பைக்கும், டிராக்டர்களுக்கும் கற்பூர தீபம் காட்டப்பட்டது.
இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த கப்பியரிசியை அனைவருக்கும் பிரசாதமாக அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டது. பொன்னேர் பூட்டிய பின்னர் ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து... கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர்.
தமிழ் வருடத்தின் முதல்நாள் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் பொன்னேர் பூட்டும் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.