மத்திய பாதுகாப்புப் படை வசமானது சென்னை ஹைகோர்ட்...: நவ.16 முதல் அடையாள அட்டை அவசியம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய படை போலீசார் இன்று ஒத்திகையில் ஈடுபட்டனர். 16ம் தேதி முதல் உயர்நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளனர். முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், தலைமை நீதிபதியின் அறையின் முன்பு அண்மையில் போரட்டம் நடத்தினர்.
இதனால் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு (சி.ஐ.எஸ்.எப்.) அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போதிலும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 16ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படைபோலீஸ் மூலம் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கடந்த அக்டோபர் 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் அடிப்படையில், இந்த பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசுக்கு ரூ.16.60 கோடியை தமிழக அரசு வழங்கியது.
இதையடுத்து சி.ஐ.எஸ்.எப். போலீசார் 650 பேர் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்தனர். உயர்நீதிமன்றத்தை ஆய்வு செய்த அவர்கள், இரும்பு வேலி உள்ளிட்ட பணிகளை அமைத்து வருகின்றனர். மொத்தம் 650 சி.ஐ.எஸ்.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில், 450 பேர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், 200 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று சுமார் 250 சி.ஐ.எஸ்.எப். போலீசார் வந்தனர். இதில், 20 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் மனுநீதி சோழன் சிலை அருகே அணி வகுத்து நின்றனர். அவர்களுக்கு, எந்த வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும்? என்பது குறித்து சி.ஐ.எஸ்.எப். உயர் அதிகாரிகள் இந்தியில் அறிவுரை வழங்கினார்கள்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றப் பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமையன்ற மாலை 4 மணியளவில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நுழைவு வாயில்கள் முன்பு சி.ஐ.எஸ்.எப். போலீசார் வரிசையாக நின்று, உயர்நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் குறித்து விசாரித்து, அதன்பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
இதற்கிடையில், இந்த உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக இன்று காலை 11 மணிக்கு சி.ஐ.எஸ்.எப். போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். 16ம் தேதி முதல் உயர்நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணிவகுப்பு ஒத்திகை
இதற்கிடையில், இந்த உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக இன்று காலை 11 மணிக்கு சி.ஐ.எஸ்.எப். போலீசார் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். 16ம் தேதி முதல் உயர்நீதிமன்ற வளாகப் பகுதி முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளனர். ஒத்திகை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.எஸ்.எப். ஐ.ஜி. மிஸ்ரா, உயர்நீதிமன்றத்தில் 3 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கார் பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று மிஸ்ரா கூறினார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்கள் காலை 8 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.