ஈரோடு: கர்ப்பமாக்கிவிட்டு ஜாதியை காட்டி கம்பி நீட்டும் மாணவன் மீது மாணவி போலீசில் புகார்!
ஈரோடு: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய மாணவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கல்லூரி மாணவி புகார் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் காலனியைச் சேர்ந்த வி.நாச்சிமுத்து மகள் என்.ரஞ்சிதா போலீசில் அளித்துள்ள புகார்:
நான் திருப்பூர் மாவட்டம் முள்ளிப்புரம் காலனியில் என்னுடைய தந்தை வி.நாச்சிமுத்து, தாய் லட்சுமியுடன் வசித்து வருகிறேன். மேலும் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறேன்.
என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் பகுதி நேரமாக நான் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன்.
ஈரோடு எழுமாத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பன், ராணி என்பவருடைய மகன் கதிரேசன். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நான் பணியாற்றி வந்த அதே நிறுவனத்தில் கதிரேசனும் பகுதிநேரமாக பணியாற்றினார்.
நானும், கதிரேசனும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் எங்கள் 2 பேருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக பழக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி என்னை கதிரேசன் காதலிப்பதாக கூறினார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டார்.
இதனால் நான் தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனவே கதிரேசன் பெற்றோர்களை சந்தித்து விவரத்தை எடுத்துக்கூறி அவரை எனக்கு திருமணம் செய்து வைக்கும்படி நானும், எனது பெற்றோரும் வேண்டினோம். ஆனால் கதிரேசனும், அவருடைய பெற்றோரும் எனது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.
இதுகுறித்து நான் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் கடந்த மே மாதம் 25-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நானும், எனது தந்தை நாச்சிமுத்துவும் ஈரோடு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு ஈரோடு பஸ் நிலையத்தில் எங்கள் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தோம்.
அப்போது அங்கு வந்த கதிரேசன், அவருடைய பெற்றோர் மற்றும் சிலர் எங்களை பார்த்து திட்டியதுடன், போலீசில் நீ கொடுத்த புகாரை மரியாதையாக வாபஸ் வாங்கு. இல்லை என்றால் உன்னையும், உன் பெற்றோரையும் வீட்டுக்குள் வைத்து தீயிட்டு கொளுத்தி விடுவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை கர்ப்பமாக்கிய கதிரேசன்மீதும், என் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு எங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மாணவி மனுவில் கூறியுள்ளார்.