ஈரோட்டில் கனமழையால் மாட்டுக் கொட்டகை சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி
ஈரோடு: ஈரோட்டில் கனமழை காரணமாக கூரை சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று மாலையும் கனமழை பெய்தது. அப்போது கோபிசெட்டிபாளையத்தை அடுத்த செல்லிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் என்பவரின் மகன் டில்லிராஜ் அவரது தோட்டத்தில் இருந்த கால்நடைகளை கூரைக்கொட்டகையில் அடைக்கச் சென்றுள்ளார்.
அப்போது, ஏற்பட்ட சூரைக்கற்றில் திடீரென மாட்டுக்கொட்டகையின் கூரை சாய்ந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய டில்லிராஜ் மூச்சுத் திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் டில்லிராஜின் உடலை மீட்டு ஆய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் கோபி கலைக்கலூரியில் இளங்கலை கணினி அறிவியல் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.