ஆய்வு நடத்திய கிரண்பேடி.. முற்றுகையிட்ட காங்.கட்சியினர்.. போலீஸுடன் தள்ளுமுள்ளு
புதுச்சேரியில் உள்ள குளம் ஒன்றை ஆய்வு நடத்த வந்த ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள குளம் ஒன்றை ஆய்வு நடத்த வந்த ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி அரசுக்கு எதிராக, அம்மாநில துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கிரண்பேடி மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் இன்று அவருக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முத்திரபாளையத்தில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது கிரண்பேடியை 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். புதுச்சேரியை விட்டு ஆளுநர் வெளியேற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதில் நிறைய பெண் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அரசை கட்டுப்படுத்த நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். முற்றுகையிட்டவர்களை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து துணை நிலை ஆளுநரை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அங்கு இருக்கும் மண்டபம் ஒன்றில் அடைந்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.