கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கள்ள நோட்டு கடத்தி வந்த இருவர் கைது
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த கும்பலை சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு இளைஞர் ஒருவர் ரயில் மூலம் கள்ள நோட்டுகளை கடத்தி வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
சென்ட்ரல் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்தனர். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எருக்கஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் பெரிய பையுடன் நேற்றுமுன்தினம் இறங்கினார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவர், எருக்கஞ்சேரியில் உள்ள மற்றொரு நண்பர் ரபீக் என்ற இஸ்மாயில் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். இதை தனிப்படையினர் மப்டியில் கண்காணித்தனர்.
பின்னர் அவர்களிடம், நாங்கள் தொழில் அதிபர்கள், எங்களது நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது கள்ள ரூபாய் நோட்டுக்களை சேர்த்து கொடுக்கலாம். ரூ.5 லட்சம் தருகிறோம். நீங்கள் ரூ.510 லட்சத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை தாருங்கள் என்று மப்டி போலீசார் பேரம் பேசினர்.
அவர்களிடம், எருக்கஞ்சேரியில் பணத்துடன் நிற்கும்படி சாகுல் ஹமீது, ரபீக் ஆகியோர் தெரிவித்தனர். அன்று இரவு போலீசார் மப்டியில் அங்கு வந்து நின்றனர். பணம் கொடுப்பதுபோல ஒரு சூட்கேஸை கொடுத்தனர். அவர்களும் பதிலுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்தனர். திடீரென வந்தவர்கள் போலீஸ் என்று தெரியவே கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை துப்பாக்கிமுனையில் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 லட்சத்து 90 ஆயிரம் கள்ள நோட்டுகள், கை துப்பாக்கி, 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. ரபீக் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ரூ.51 லட்சம் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.