நாட்டிலேயே முதல்முறையாக ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பசுமை வழித்தடம் திறப்பு
சென்னை: நாட்டில் முதல் முறையாக ராமேஸ்வரம்-மானாமதுரை இடையேயான பசுமை வழித்தடத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று துவங்கி வைத்தார்.
நாட்டில் முதல் முறையாக ராமேஸ்வரம்-மானாமதுரை இடையேயான மனித கழிவுகளற்ற பசுமை வழித்தடத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
மேலும் அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியையும் இன்று துவங்கி வைத்தார். இது தவிர ஆயூஷ் திட்டத்தின்படி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் மரபு சார்ந்த மருத்துவ சேவை வசதிகள், திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே 16.83 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது வழித்தடம், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடைக்கும் 2,3-வது நடைமேடைகளுக்கும் இடையே 2 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), திருச்சி ரயில் நிலையத்தில் அதிவேக வைஃபை வசதி ஆகிய திட்டங்களையும் அவர் இன்று துவங்கி வைத்தார்.
இதே போன்று அரியலூர்-மாத்தூர் ரயில் நிலையங்கள் இடையே 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை வழித்தடம், சேலம் ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடைக்கும், 3,4-வது நடைமேடைகளுக்கும் இடையே என 2 நகரும் படிக்கட்டுகளையும் அவர் காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
ராமேஸ்வரம்-மானாமதுரை பசுமை ரயில் தடத்தில் செல்லும் 10 ரயில்களின் 286 பெட்டிகளில் உயிரிகழிவறை அமைக்கப்பட்டுள்ளது. பெட்டிகளில் சேரும் கழிவுகள் வேதியியல் முறையில் நீராக மாற்றப்பட்டு வெளியேற்றப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.