ஆளுநர், முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 4-ல் நேரில் ஆஜராக இளங்கோவனுக்கு சம்மன்
சென்னை: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகன் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த ஏப்ரல் 30-இல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, ஆளுநர், முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஆகையால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெ.ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரத்தை அரசு தரப்பு சமர்பித்துள்ளதால்,இந்த இரண்டு வழக்கிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.