மீண்டும் உடைகிறது மநகூ? ஆர்கே நகரில் சிபிஎம் தனித்து போட்டி?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி மீண்டும் உடையக் கூடும் என கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக இடைத்தேர்தல்கள் வரலாற்றில் ஆர்.கே.நகரும் இடம்பிடிக்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அதிமுகவின் டிடிவி தினகரன், திமுகவின் மருது கணேஷ், தீபா, தேமுதிகவின் மதிவாணன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றன.
மநகூ ஆலோசனை
மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவை திமுகவும் சசிகலா அதிமுகவும் கோரியுள்ளன. இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாறுபாடுகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக அல்லது சசிகலா அதிமுகவை ஆதரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியோ போட்டியிட்டே தீருவது என்ற முடிவில் இருக்கிறதாம்.
சிபிஎம் இன்று அறிவிப்பு
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தீவிர ஆலோசனையை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதா? புறக்கணிப்பதா? அல்லது யாருக்கு ஆதரவு என்ற முடிவு தெரியவரும்.
மீண்டும் உடையும்?
மக்கள் நலக் கூட்டணியில் ஏற்கனவே மதிமுக விலகிவிட்டது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் ஒரு நிலைப்பாட்டையும் மார்க்சிஸ்ட் கட்சி மாறுபட்ட நிலையையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் நலக் கூட்டணி மீண்டும் உடையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.