புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைப்பு : சி.ஆர்.பி.எப் வீரர் கைது
புதுக்கோட்டை அருகே பெரியார் சிலையை குடிபோதையில் உடைத்ததாக சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில், சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் சிலையை உடைத்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவந்த போலீஸார், செந்தில்குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார் சி.ஆர்.பி.எப் படை வீரர் என்பதும், சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் குடிபோதையில் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெரியார் சிலை உடைப்பில் ஈடுபட்ட செந்தில்குமாரை காவல்துறை 12 மணிநேரத்திற்குள் கைது செய்துள்ளது. மேலும், திருப்பத்தூர் விவகாரத்திலும் இரண்டு பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று விளக்கமளித்துள்ளார்.