இப்படியா ஒரேயடியாக ஆம்னி பஸ் கட்டணத்தை ஏற்றுவார்கள்.. மக்கள் கொதிப்பு!
சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் திடீரென இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது சொந்த ஊர் செல்லும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதையில் இயக்கவும் முடிவு செய்துள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை - சேலம், சென்னை - மதுரை, சென்னை - திண்டுக்கல் உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் தீபாவளியை ஒட்டி திடீரென உயர்த்தப் பட்டது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏசி, நான்-ஏசி உள்ளிட்ட 5 விதமான கட்டணங்கள் அறிவிப்பு :
- திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு ரூ.750 ஏசி ரூ. 935, ஸ்லீப்பர் ரூ. 850 ஏசி ஸ்லீப்பர் ரூ.1,100
- காரைக்குடி, அறந்தாங்கி, கரூர், ஈரோடு, நாமக்கல், சிவகங்கைக்கு ரூ.790 ஏசி ரூ. 975, ஸ்லீப்பர் ரூ. 890 ஏசி ஸ்லீப்பர் ரூ.1,190
- சிவகாசி, கம்பம், தேனி, பொள்ளாச்சி, உடன்குடி ரூ.935 ஏசி ரூ. 1045, ஸ்லீப்பர் ரூ. 1045 ஏசி ஸ்லீப்பர் ரூ.1,375
- நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு ரூ.950 ஏசி ரூ. 1150, ஸ்லீப்பர் ரூ. 1100 ஏசி ஸ்லீப்பர் ரூ.1,600
- மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.880 ஏசி ரூ. 990, ஸ்லீப்பர் ரூ. 935 ஏசி ஸ்லீப்பர் ரூ. 1200
- கோயம்புத்தூர், திருப்பூருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.880 ஏசி ரூ. 990, ஸ்லீப்பர் ரூ. 935 ஏசி ஸ்லீப்பர் ரூ. 1200
- ஊட்டி, கொடைக்கானலுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.950 ஏசி ரூ. 1045, ஸ்லீப்பர் ரூ. 935 ஏசி ஸ்லீப்பர் ரூ. 1400
- பெங்களூரு குறைந்த பட்ச கட்டணம் ரூ. 770 ஏசி ரூ. 935, ஸ்லீப்பர் ரூ. 935 ஏசி ஸ்லீப்பர் ரூ. 1320
- எர்ணாக்குளம், கொல்லம் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 1200 ஏசி ரூ. 1350, ஸ்லீப்பர் ரூ. 1250 ஏசி ஸ்லீப்பர் ரூ. 1870
இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.அன்பழகன், எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர் அதன் விபரம்:
1200 பேருந்துகள் இயக்கம்
கடந்த சில ஆண்டுகளாக ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயித்து நாங்கள் இயக்குகிறோம். வழக்கமாக 600 ஆம்னி பேருந்துகள் இயக்கி வருகிறோம். பண்டிகை நாட்களில் தேவையை கருத்தில் கொண்டு தினமும் 1200 பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதன்படி, வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் 1200 பேருந்துகளை இயக்கவுள்ளோம்.
போக்குவரத்தில் மாற்றம்
தீபாவளியையொட்டி சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வழியாக புதிய பைபாஸ் சாலை சென்று, வண்டலூர் வழியாக ஆம்னி பேருந்துகளை இயக்கவுள்ளோம். மேற்கூறிய தேதிகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது.
புகார் அளிக்க எண்கள்
ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். உரிமையாளர்கள் அனைவருக்கும் சங்கம் அறிவித்த கட்டணங்களுக்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது. ஆப்ரேட்டர்களிடம் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். அதிகமாக கட்டணம் வசூலித்தால் 044-32000090 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
ஆம்னி பேருந்துகள்
இந்த சங்கத்தை தவிர தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்ற மற்றொரு சங்கம் இருக்கிறது. இந்த சங்கத்தின் கீழ் மொத்தம்முள்ள 35 ஆபரேட்டர்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சங்கம் சார்பில் இதுவரையில் கட்டணம் அறிவிக்கவில்லை, அடுத்த சில நாட்களில் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
இருமடங்கு உயர்வு
சென்னையிலிருந்து திண்டுக்கல் செல்லும் நான் ஏ.சி பேருந்துக்கான கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.450 ஆக இருந்தது, தீபாவளியை ஒட்டி ரூ.790 ஆக உயர்வு. இதே விதத்தில் சென்னை - நாகர்கோவில் செல்லும் படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி ஆம்னி பேருந்துக்கான கட்டணம் ரூ.1200 ஆக உயர்வு. சென்னை - கோவை செல்லும் நான் ஏ.சி ஆம்னி பேருந்துக்கான கட்டணமும் ரூ.650 லிருந்து ரூ.990 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்துக்கான கட்டணமும் இதே விகிதத்தில் ரூ.600 லிருந்து 950 ஆக உயர்ந்துள்ளது.
பயணிகள் அதிருப்தி
தீபாவளியை ஒட்டி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று வரும் ஆசையிலிருந்த சென்னைவாசிகளிடையே பேருந்துக் கட்டணங்களின் திடீர் உயர்வு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் தீபாவளியை முன்னிட்டு பேருந்துக் கட்டணங்கள் இப்படி திடீர், திடீரென உயர்த்தப்படுவதாக சொந்த ஊர் சென்று திரும்பும் ஆசையிலிருக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.