500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்.. புது சிக்கலில் மக்கள்
தபால் நிலையத்தில் 500, 1,000 ரூபாய்கள் நோட்டுகளை மாற்ற சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கினால் மட்டுமே தபால் நிலையத்தில் 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்ற புதிய நிபந்தனையால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், புதிய நோட்டுகளைப் பெறவும் தொடர்ந்து வங்கிகளில் கூட்டம்அலைமோதி வருகிறது.
தபால் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்பதால் அங்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதனிடையே பணத்தை மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் அடுத்தடுத்து புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கினால் மட்டுமே தபால் நிலையத்தில் 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கினால் மட்டுமே பணம் டெபாசிட் செய்யவும், நோட்டுகளை மாற்றவும் முடியும் என்று அஞ்சலக ஊழியர்கள் கூறியதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கிகளில் நீண்ட வரிசை, ஏ.டி.எம்.களில் பணம் இல்லை, கடைகளில் பழைய நோட்டுகளை வாங்குவதில்லை, போன்ற பல்வேறு சிக்கலில் தவித்து வரும் மக்களுக்கு தபால் நிலைய சிக்கலும் பெரும் தலை வலியாக மாறியுள்ளது.