கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக, புதிய தமிழகம் நிர்வாகிகள்!
நாள்தோறும் தனக்கு வரும் கொலை மிரட்டல்களில் பாஜக பிரதிநிதி என்று கூறியே தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கூறியுள்ளார்.
மதுரை : புதிய தமிழகம் மற்றும் பாஜகவினர் என்று சொல்லியே தனக்கு கொலை மிரட்டல்கள் அதிக அளவில் வருவதாக ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் தேதி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அளித்திருந்த பேட்டியில் கக்கூஸ் ஆவணப்படத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மலம் அள்ளுவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என்று திவ்யபாரதி மீது வழக்கு தொடர்ந்தார். இதனை சந்திக்கத் தயார் என்று திவ்யபாரதி தனது முகநூலில் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து புதிய தமிழகம் நிர்வாகிகள் திவ்யபாரதியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச அர்ச்சனைகளும், கொலை மிரட்டல்களும் விடுத்து வருவதாகதிவ்யபாரதி ஏற்கனவே புகார் கூறியிருந்தார். இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் திவ்யபாரதி கூறியதாவது:
தொடரும் மிரட்டல்கள்
10 நிமிடத்திற்கு ஒரு முறை என்று எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான அழைப்புகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் இருந்தும், குறிப்பாக கோவையில் இருந்து அதிக அழைப்புகளும் வருகின்றன. என்னுடைய தொலைபேசியில் சில செயலிகளைப் போட்டு நம்பரைக் கண்டுபிடித்தேன்.
பாஜக நிர்வாகிகள்
அதில் பாஜக நிர்வாகிகள் என்ற ரீதியில் தொலைபேசி எண்கள் வருகின்றன. மற்றொரு தொலைபேசியில் இருந்து மிரட்டல் விடுத்தவர்களை தொடர்பு கொண்டால் தாங்கள் பாஜக பிரதிநிதி என்றே அவர்களும் கூறுகின்றனர். எனக்கு வரும் மிரட்டல்களில் 100க்கு 40 சதவீதம் நெட் காலிங், வளைகுடா நாடுகள், துருக்கி, உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
பின்தொடரும் மர்ம நபர்கள்
அருவறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதோடு, உன் மூஞ்சிக்கு ரூ.2 கோடியா என்றெல்லாம் வசை பாடுகின்றனர். அவர்கள் பகிரங்கமாகவே கூலிப்படை என்று அறிவித்துக் கொள்கிறார்கள். வழக்கு ஒன்றில் தினமும் 10 மணிக்கு மதுரை காவல்நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்து போட வந்த போது என்னைப் பின் தொடர்ந்து வந்து நீ டீ குடிக்கிறாயா என்று தொலைபேசியில் கேட்கின்றனர்,ஆக என்னை நிழல் போல தொடர்ந்து வருகின்றனர்.
போலீஸ் நடவடிக்கை
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன், சைபர் கிரைம் போலீசாரும் விசாரைணை நடத்துகின்றனர். வாட்ஸ் அப், முகநூலில் பரவும் செய்திகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை எப்படி ட்ரேஸ் செய்வது என்றும் கேட்கின்றனர். ஓரிரு நபர்களையாவது கண்டுபிடிக்கச் சொன்னால் அவர்களிடம் சமரச பேச்சு நடத்துவதாகக் கூறுகின்றனர்.
கிருஷ்ணசாமி கூட்டணி எதற்காக?
எதற்காக இந்த மிரட்டல்கள் வருகின்ற என தெரியவில்லை. கடந் 10 நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக டீன் 15 பேரை வேலையை விட்டு நீக்கினார். சம்பந்தப்பட்டவர்களை வைத்து கடுமையான பணிகளைச் செய்ய வைத்ததோடு, அவர்களை கைகளால் மலம் அள்ளவும் வைத்திருக்கிறார். மேலும் பல்கலைக்கழக டீனின் கணவர் அந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் செய்துள்ளார். இதனை என்னுடைய யூ டியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தேன். அப்போது அந்த டீனின் சாதி என்னவென்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஒரு வேளை அந்தச் சாதிப் பின்னணியில் தான் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி சேர்ந்து இப்படி மிரட்டல்களை விடுக்க வைக்கிறாரோ தெரியவில்லை.
மாட்டிறைச்சி தடை படத்திற்காகவா?
மேலும் மிரட்டல் விடுவோர் பலர் பசு புனிதம் என்று என்னிடம் பேசத் தொடங்குகின்றனர், என்னுடைய அடுத்த ஆவணப்படம் மாட்டிறைச்சி தடைக்கு எதிரானது என்று அறிவித்துள்ளேன். அதற்காக என் மீது இந்தத் தாக்குதல்கள் வருகின்றதா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பெண் என்பதைத் தாண்டி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.