தினகரன் எம்எல்ஏவாக டிச., 29ல் பதவியேற்பு- 2018ல் சட்டசபை களைகட்டும்
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நாளை மறுநாள் டிசம்பர் 29ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்கிறார். அப்போ அடுத்த வருஷம் சட்டசபை களைகட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்கக் போகிறார். சட்டசபை கூட்டத்தொடர் இனி களைகட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.
டிச.29ல் பதவியேற்பு
டிடிவி தினகரன் நாளை மறுநாள் எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளார். இதுநாள் வரை எம்.பி பென்சனில் வாழ்ந்து வருவதாக கூறிய டிடிவி தினகரன் இனி எம்எல்ஏவாக மாதம் ஒரு லட்சம் வாங்கப்போகிறார்.
சசிகலா குடும்ப எம்எல்ஏ
சட்டசபையில் சசிகலா குடும்பத்தில் ஆதரவாளர்கள்தான் எம்எல்ஏவாக இருந்தனர். இனி சசிகலா குடும்பத்தில் இருந்து அவரது அக்காள் மகனே எம்எல்ஏவாக பதவியேற்கப் போகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அறையில் பிற்பகல் 1.30 மணி அளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தினகரனுக்கு பேரவைத் தலைவர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தொகுதி மக்களுக்கு நன்றி
டிசம்பர் 29ஆம் தேதியன்று எம்எல்ஏவாக பதவியேற்கப் போகும் தினகரன், அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவாரா? அல்லது முதல்வராக வர விரும்புகிறாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். இதற்கு முன்னதாக பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஆசி பெறுவார் என்றும் எம்எல்ஏவாக பதவியேற்ற பிறகு ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பார் என்றும் தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் தினகரன்
தமிழக சட்டசபை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் ஜனவரி மாதத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். இந்த நிலையில் ஆளுநருக்கு உரை தயாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் எம்எல்ஏவாக தினகரன் பங்கேற்க உள்ளார்.
சட்டசபையில் என்ன நடக்கும்?
இந்த கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி உள்ள நிலையில் சட்டசபை கூட உள்ளதால் அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள தினகரன் சிங்கிளாக சட்டசபைக்குள் செல்வார். அவரிடம் அதிமுகவினர் முகம் கொடுத்து ஒருவரை ஒருவர் பேசி சிரிப்பார்களா? அல்லது முகத்தை திருப்பிக்கொள்வார்களா?
தலைவலியா?
டிடிவி தினகரன் எங்களுக்கு மூட்டைப்பூச்சி என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அவர் மூட்டைப்பூச்சியா அல்லது ஆட்சிக்கு தலைவலியாக மாறப்போகிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும். தினகரனின் கலாட்டாக்களினால் 2018ஆம் ஆண்டும் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.