எப்படிப்பட்ட இயக்குநர் வி.சேகர்.. இப்படிப் போய் மாட்டிக் கொண்டாரே!
சென்னை: இயக்குநர் வி.சேகர்.. இயக்குநர் விசுவின் பிரதம சிஷ்யர். விசுவைப் போலவே குடும்பப் பாங்கான, நடுத்தர குடும்பங்களை மையமாக வைத்துப் படம் எடுத்துப் பிரபலமானவர்.
1990களின் இறுதியிலும், 2000மாவது ஆண்டுகளின் தொடக்கத்திலும் இவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆனவை.
ஒவ்வொரு படமும் அவ்வளவு அருமையான கதையம்சத்துடன் கூடியவை. குடும்பங்களின் பிரச்சினைகளை அலசும் இவரது ஸ்டைல் அலாதியானது. விசுவுக்குப் பிறகு அதை சரியாக செய்தது இவர்தான்.
குறிப்பாக நடுத்தர வர்க்கத்து பிரச்சனைகளை அவ்வளவு அழகாக, இயல்பாக தனது படங்களில் காட்டியிருப்பார். கூட்டுக் குடும்பங்களின் அழகை, முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைத்திருப்பார்.
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் மனைவி பேச்சை மதித்து கணவர் நடக்க வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்தியிருப்பார் வி.சேகர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றைய குடும்பங்களுக்கு அருமையான அறிவுரையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்னா இருக்க கத்துக்கனும்.. இது இன்னொரு நல்ல கதையம்சம் கொண்ட படம். கல்வி அறிவு ஒரு மனிதனுக்கு குறிப்பாக சிறார்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிய அழகான படம்.
வரவு எட்டணா செலவு பத்தணா.. சிக்கனத்தின் அருமையை, தேவையை விளக்கிய படம். படத்தில் காமெடியும் சரி, வசனங்களும் சரி ரொம்பப் பிரபலம். குடும்பத் தலைவன் தடம் மாறுவது எவ்வளவு தவறோ.. அதே போல குடும்பத் தலைவியும், குடும்பத் தலைவனை தவறு செய்ய தூண்டுவது அதை விட பெரிய தவறாகப் போகும் என்பதை விளக்கிய படம் இது.
காலம் மாறிப் போச்சு... பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நடமாடும் தந்தையர்களுக்கும், சகோதரிகளின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் நடமாடும் பொறுப்பற்ற சகோதரர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுத்த படம் இது... பெண்களின் உணர்வுகளை மதித்து ஆண்கள் நடக்க வேண்டும் என்ற பாடம் தந்த படம் இது.
சிறுதொழில், சுய தொழில் குறித்த நல்லதொரு பாடமாக அமைந்த படம் இது. இளைஞர்கள் யாரையும் நம்பாமல், நம்பி ஏமாறாமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்திய படம் இந்த பொங்கலோ பொங்கல்.
கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வி.சேகர் இயக்கிய படம் இது. சகோதர சகோதரிகள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும், பிரச்சினைகளை சமாளிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய குடும்பப் படம்.
திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் இப்படி அருமையான குடும்பப் படங்களைக் கொடுத்த வி.சேகர் இன்று சிலைத் திருட்டு வழக்கில் கைதாகியிருப்பது காலத்தின் கோலம்தான்.