திவாகரனைத் தொடர்ந்து விவேக்குக்கு 'ஆப்பு' வைக்க தயாராகும் தினகரன்!
திவாகரனைத் தொடர்ந்து சசிகலாவிடம் இருந்து விவேக்கை கழற்ற திட்டமிட்டுள்ளார் தினகரன்.
Recommended Video
சென்னை: சசிகலாவிடம் இருந்து திவாகரனை பிரித்தது போல விவேக்கையும் கழற்றிவிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் தினகரன்.
மன்னார்குடி கோஷ்டிகளின் குடும்ப மோதல் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டது. பெங்களூரு சிறையில் சசிகலா அனுமதியோடு நோட்டீஸ் அனுப்பினார் தினகரன் தரப்பு வழக்கறிஞர்.
இந்த நோட்டீஸை திவாகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. தினகரனின் தூண்டுதலில்தான் இப்படியொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது' எனக் கொதித்தனர். இதுகுறித்துப் பேசும் விவரம் அறிந்த மன்னார்குடி குடும்பத்தினர், சிறையில் தினகரன் சந்திக்கச் சென்றபோதே, இப்படியொரு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என எதிர்பார்த்தார் திவாகரன்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே அறிக்கை தயாராகிவிட்டது. இதில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதைப் பற்றி அனுராதாதான் விவரித்திருக்கிறார். இதனால் தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்து, பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் திவாகரன்.
இதற்கு பதில் கொடுத்தவர்கள், ' என்னங்க சார்...பண்றது..என்ன செய்யச் சொன்னாங்களோ அதைச் செய்தேன். அவரோட பிரஷர் தாங்க முடியல. இந்த நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் எனப் பலமுறை சொன்னோம். அவர் உறுதியாக இருக்கிறார். எங்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை' என விவரித்துள்ளனர். ' இந்த நோட்டீஸை அனுப்பாமல் கொஞ்சம் காலம் தாழ்த்த முடியுமா? சிறையில் அக்காவை சந்திக்க இருக்கிறோம். எங்கள் தரப்பை விளக்குவதற்கும் அவகாசம் வேண்டும். எனவே, உடனே நோட்டீஸை அனுப்ப வேண்டாம்' என திவாகரன் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
' இல்லை சார்...எங்களால் காலம் தாழ்த்த முடியாது. ஓரிரு நாட்களில் அனுப்ப இருக்கிறோம்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, ' நாம் எவ்வளவு சொல்லியும் இவர்கள் கேட்க மறுக்கிறார்கள். இனி நடப்பது நடக்கட்டும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார் திவாகரன்.
"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் டி.டி.வி. அரசியல் ஆலோசனை என்ற பெயரில், திவாகரன் தரப்பினர் உள்ளே நுழைவதையும் அவர் விரும்பவில்லை. ' இந்த அமைப்புக்குள் புதிய கோஷ்டியை உருவாக்குகின்றனர்' என உறுதியாக நம்பினார் டி.டி.வி.
ஒரே ஒரு நோட்டீஸிலில் திவாகரனை தன்னந்தனியாக தவிக்கவிட்டுவிட்டார். இனி அவருடைய அடுத்த இலக்கு விவேக்தான். நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி என வலுவான துறைகளைக் கையில் வைத்திருக்கிறார் விவேக். இதைக் கைப்பற்றுவது தினகரனின் நீண்டநாள் கனவு. இதைக் கொடுத்துவிட்டால், இளவரசி குடும்பத்தினர் கொதித்துவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருக்கிறார்.
சசிகலாவின் குட்புக் பட்டியலில் இருந்து விவேக்கைத் தூக்குவதற்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார் டி.டி.வி. விரைவில் அதையும் சாத்தியப்படுத்துவார்" என்றனர்.