புதிய தேடலை நோக்கி வேடலில் கூடும் தேமுதிக.. அழைக்கிறார் "கேப்டன்".. இதுதாங்க இன்விடேஷன்!
சென்னை: தேமுதிக வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று யாருக்கும் புரியாத நிலையில் புதிராக உள்ள நிலையில் காஞ்சிபுரம் அருகே வேடல் என்ற இடத்தில் நடைபெறும் தேமுதிகவின் அதிருப்புமுனை மாநாட்டுக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் - வேடல் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முகப்பில் விஜயகாந்த் - பிரேமலதா
அழைப்பிதழின் முகப்பில் விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்ததும் இடம் பெற்றுள்ளனர். அதில் தேமுதிக நடத்தும் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது.
துணிந்திடு... தவறுகளைக் களைந்திடு
அதற்குக் கீழே துணிந்திடு தவறுகளைக் களைந்திடு புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற வாசகத்துடன், ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம் என்று இடம் பெற்றுள்ளது.
எழுச்சி உரை
அடுத்த பக்கத்தில் மாநாட்டிற்குத் தலைமையேற்று விஜயகாந்த் எழுச்சி உரை ஆற்றவிருப்பதைச் சொல்லும் தகவல் இடம் பெற்றுள்ளது. சிறப்புரையை பிரேமலதா விஜயகாந்த் ஆற்றவுள்ளார்.
கட்சிப் பிரமுகர்கள் பேச்சு
அடுத்த பக்கங்களில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ள கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்ப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துரை வழங்குவோரில் முதல் பெயராக எல்.கே.சுதீஷ் பெயர் இடம் பெற்றுள்ளது.
பனை ஓலைகளும்.. லேப்டாப்புடன் விஜயகாந்த்தும்
அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும் ஆட்சி மாறட்டும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் லேப்டாப்புடன் விஜயகாந்த் அமர்ந்திருப்பதைப் போன்ற படமும், கூடவே பனை ஓலைகளின் பின்னணியில் தேமுதிகவின் பல்வேறு இணையதள முகவரிகள், ஆப் விவரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை இவை உணர்த்துவதாக உள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
இதுதவிர பத்திரிகையாளர்களுக்கு மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. அதில் மாநாட்டின் மேடையின் முன் பகுதியில் பத்திரிகையாளர்கள் சிறப்பான முறையில் செய்தி சேகரிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்சாகத்தில் தொண்டர்கள்
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மாநாடு நடத்திய பின்னர்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அதேபோல இந்த முறையும் அவர் மாநாட்டைக் கூட்டியுள்ளார். இந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் போகவுள்ள கூட்டணி எது என்பதை அறிய தேமுதிகவினர் ஆர்வமாக உள்ளனர்.