அவதூறு வழக்கை தள்ளுபடி செய்க... மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேமுதிக எம்.எல்.ஏ. மனு
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க எம்.எல்.ஏ சந்திரகுமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒத்திவைத்தது.
முன்னதாக சந்திரகுமார் தாக்கல் செய்திருந்த மனுவில், "தே.மு.தி.க சார்பில் 2013 ஏப்ரலில் மார்த்தாண்டம் அருகே காரைவிளையில் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக என் மீது கன்னியாகுமரி மாவட்ட அரசு வக்கீல் நாகர்கோவில் கோர்ட்டில் புகார் செய்தார். நான் வேண்டுமென்றே ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகாரில் உள்ளது.
இது பழிவாங்கும் நடவடிக்கை. எங்கள் தலைவர் விஜயகாந்த் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கட்சித் தலைமையை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசு வக்கீல் புகார் செய்துள்ளார். எனக்கு அவ்வாறு பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமைக்குட்பட்டு பேசினேன்.
வழக்கை ரத்து செய்ய வேண்டும். கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இம்மனுவினை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் சேவுகராஜா ஆஜரானார். மனுவினை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.