பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும்: இல.கணேசன் நம்பிக்கை
கோயம்புத்தூர்: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று இல. கணேசன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அல்லாத மாற்றுக் கட்சிகளுடன் பேசி புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறோம். இதற்காக மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
தேமுதிக வரும்..
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தபோது அவர் பிப்ரவரியில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
வண்டலூர் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள்..
சென்னை வண்டலூரில் பிப்ரவரி 8ந் தேதி நடைபெறும் பாஜக கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். வைகோ உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தாருங்கள் தாமரைக்கு...
தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் பாஜக கூட்டங்கள் நடத்தி, தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளோம். அதில், "தாருங்கள் உங்கள் ஓட்டு தாமரைக்கு" என வீடுதோறும் பிரசாரம் செய்ய உள்ளோம்.
ஆம் ஆத்மியால் பாதிப்பில்லை..
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தேர்தல் மாநாடு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை.
இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.