அசாதாரண சூழல்.. சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட.. திமுக எம்எல்எக்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வரும் நிலையில், சட்டசபையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவை தலைவருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்க சட்டசபை உடடினயாக கூட்டப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் சட்டசபைக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.