கறி விருந்து கம கமக்க … களைகட்டப் போகுது அழகிரி பிறந்தநாள்
சென்னை: மதுரையில் இரண்டு விழாக்கள் பிரபலம்... சித்திரை மாதம் நடைபெறும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் எந்த அளவிற்கு பிரபலமானதோ அதேபோல தை மாதம் ( ஜனவரி 30) திமுகவினர் கொண்டாடும் அழகிரியின் பிறந்தநாள்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகிரியின் பிறந்தநாளில் மதுரையே குலுங்கும். பால்குடம், முளைப்பாரி, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று ஊரே அமர்களப்படும்.
மதுரை சத்தியசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரைக்கும் பேரணிபோல நடத்துவார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.
அழகிரியின் பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாகவே பேனர்கள், போஸ்டர்கள், சுவர்களில் அழகிரியின் ஓவியங்களும் வரையப்பட்டு அசத்தல் வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஆண்டு வரும் 30ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள், வழக்கம் போல, படு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.,வில் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் பலரும் ஒன்று கூடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 30ல் பொதுக்குழு
கடந்த ஆண்டு அழகிரியின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் களைகட்டியபோது, சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு நடக்கவிருந்தது. அப்போது 'மதுரையில் ஜனவரி - 30 பொதுக்குழு' என அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரால் கலகக்குரல் வெடித்தது.
கட்சியிலிருந்து நீக்கம்
கலகக்குரல் எழுப்பிய அழகிரியின் ஆதரவாளர்கள் கட்டம் கட்டப்பட்டனர். இதுகுறித்து கருணாநிதியிடம் பேசுவதற்காக கோபாலாபுரம் வீட்டிற்குச் சென்ற அழகிரிக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மாறாக கருணாநிதியை அழகிரி மிரட்டினார்' எனக் களேபரமானது.
எதிரான போஸ்டர்கள்
அழகிரிக்கு எதிராக சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொல்லி, தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்தும், தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அழகிரியை நீக்கினார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
அந்த கலவர சூழலிலும் அழகிரியின் பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினர் அவரது விசுவாசிகள். பால் குடம் எடுத்து வந்து அழகிரியின் பிறந்தநாளுக்கு பாலபிஷேகம் செய்தனர். முளைப்பாரி எடுத்தனர். சிங்கத்தின் மீது அழகிரியின் உருவத்தை ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். 63 அடி உயர கேக் வெட்டினார் அழகிரி
அழகிரியின் அதிரடி
மே மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார் அழகிரி. அதே நேரத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அவரிடம் இருந்து விலகினார்கள். அழகிரியால் உச்சத்திற்கு வந்த தளபதி, மூர்த்தி, தமிழரசி, ஜெயராம், வி.கே.குருசாமி, குழந்தைவேலு போன்றவர்கள் ஸ்டாலின் அணிக்குத் தாவினர்.
தனிக்கட்சி
திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாக பேச்சுக்கள் எழுந்தன. பலமுறை தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசிய கூட்டம் போட்டார். மூன்று மாதம் கழித்து என்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று சொன்னார் அழகிரி. அவருக்கே தெரியும் தனிக்கட்சி தொடங்கினால் அது எடுபடாது என்று. அதே போல வேறு கட்சி போனாலும் மரியாதை கிடைக்காது என்று உணர்ந்தே இருந்தார் அழகிரி.
தூது போன குடும்பம்
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலர் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, அவரை கட்சிக்குள் கொண்டு வர, சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஒரு பதவியும் இல்லை
உள்கட்சி தேர்தலில் ஆதரவாளர்களுக்கு 50 சதவிகித போஸ்ட்டிங் கொடுக்கவேண்டும் என்பது சமாதானத் தூதுப் படலத்தின் கடைசிக் கோரிக்கை. ஆனால், ஒரு பதவிகூட அழகிரி ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
கிளம்பிய அழகிரி
இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று மதுரையில் இருந்து கிளம்பினார் அழகிரி. உடனே தயாளு அம்மாள், அழகிரியை அழைத்ததாகவும் விரைவில் கருணாநிதி தலைமையில் சகோதரர்களுக்கு சமாதானம் செய்துவைக்கப்போவதாகவும் அழகிரி தரப்பு தகவல் பரப்பியது.
திருடர் கட்சி
ஆனால் சென்னை வருகை தோல்வியில் முடியவே, ஸ்டாலினை முகவரி இல்லாதவர் என்றும், 'திருடர் கட்சி' என்றும் வசைபாடிவிட்டு மதுரைக்கு சென்றார். "திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...." என்றும் பாடினார். இதனையடுத்து அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பான பேச்சு கிடப்பில் போடப்பட்டது. அழகிரிக்கு திமுகவில் ஒரு சதவிகித ஆதரவு கூட கிடையாது என்று பதிலடி கொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி.
இந்த ஆண்டு எப்படி?
அழகிரி பிறந்த நாள் என்றாலே எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன், மன்னன் ஆகியோர் ஆள் ஆளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்டங்களை வழங்குவார்கள். இந்த ஆண்டு எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன் ஆகியோர் அழகிரி வசமில்லை. ஆனால் வழக்கம் போல பிறந்தநாள் களைகட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த வருடம் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளைக் கலகலப்புடன் நடத்துவதில் ஆர்வமும் ஆவேசமுமாக இருக்கிறாம் அழகிரி.
களைக்கட்டுவது நிச்சயம்
இதே இன்னும் சில தினங்களில் அழகிரியின் பிறந்த நாள் வருகிறது. இதை, அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். வழக்கம்போல, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். அழகிரி வீட்டில் இருந்து, மண்டபம் வரையில் வழி நெடுக, செண்டை மேளம், இன்னிசை வாத்தியங்கள் முழங்க, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
கிடா வெட்டி விருந்து
ஏழை, எளியோர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு கிடா வெட்டி மட்டன் கறி சாப்பாட்டுடன் தொண்டர்களுக்கு விருந்து பரிமாற உள்ளனராம்.
அதிருப்தியாளர்கள் சங்கமம்
தி.மு.க., உட்கட்சி தேர்தலில் பதவி கிடைக்காமல், அதிருப்தியாக இருக்கிறவர்கள் அனைவரையும், அழகிரி பிறந்த நாளில், மதுரையில் சங்கமிக்கும்படி, மாவட்ட வாரியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலேயே பிளவுபட்டுக்கிடக்கும் ஸ்டாலின் கோஷ்டியின் அதிருப்திப் பிரிவு, அழகிரிக்கு ஆதரவான கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி கோஷ்டியை வைத்து அழகிரி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
திருமுடியா? திருவடியா?
இந்த ஆண்டும் போஸ்டர்கள் தூள் பறக்கின்றன. திருமுடி வேண்டாம், திருவடியே போதும் என்பது போன்ற போஸ்டர்கள் களைகட்டுகின்றனவாம். 2013ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே போஸ்டர் ஒட்டி களேபரம் ஏற்படுத்தினார் பொட்டு சுரேஷ். ஆனால் 2013 ஜனவரி 31 ஆம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு பிறந்தநாளில் கலகக்குரல் ஒலித்தது. இந்த பிறந்தநாளில் என்ன நடக்கப் போகிறதோ? மதுரை திமுகவினரின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.