ராம்குமார் சட்டை, அரிவாளில் படிந்துள்ள சுவாதி ரத்தம்.. டி.என்.ஏ சோதனை நடத்த போலீஸ் திட்டம்
சென்னை: ராம்குமார் கொலையாளி என்பதை நிரூபிக்க அவரது சட்டை மற்றும் அரிவாளில் படிந்திருந்த ரத்தம் மூலம் மரபணு பரிசோதனை செய்ய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி (24) ஜூன், 24ம் தேதி காலை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அடுத்த, மீனாட்சிபுரத்தை சேர்ந்த, ராம்குமார் (24) என்பவரை போலீசார், ஜூலை, 1ம் தேதி கைது செய்தனர். அப்போது பிளேடால் தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றதால், நெல்லையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பாட்டார்.
மாஜிஸ்திரேட்டு விசாரணை
ராம்குமாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம், நேற்று எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) கோபிநாத் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ராம்குமாரை 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார்.
ஆதாரத்துக்கு உதவும் ரத்தம்
சுவாதியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து ராம்குமார் ஏற்கெனவே போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்ட நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பிக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 3 வாரங்கள் போலீஸார் எடுத்துக் கொள்வார்கள் என தெரிகிறது.
அரிவாள் சட்டை
சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளில் படிந்திருந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக் கப்பட்டுள்ளது. அதுபோல ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்தத் துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ஹைதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனை
சேகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தை கொண்டு மரபணு சோதனை செய்யப்படும். அதில் சுவாதியை கொலை செய்தது ராம்குமார் என அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்படும். இந்த வழக்கில் டி.என்.ஏ. அறிக்கையானது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுதவிர தடயவியல் சோதனை மற்றும் சாட்சிகளையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.
பட்டியல் தயார்
சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள் மற்றும் ராம் குமாரை நேரில் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சாட்சிகளைக் கொண்டு இந்த வழக்கை போலீஸார் விரைவில் முடித்துவிடுவார்கள் என தெரிகிறது.