சென்னையை கலக்கும் போஸ்டர்... அதிமுகவுக்கு தலைமை ஏற்க டாக்டர் வெங்கடேசுக்கு அழைப்பு!
அதிமுகவுக்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷை ஆதரித்து சென்னையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுகவுக்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசுக்கு அழைப்பு விடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. அதன் பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஓபிஎஸ் அணியினருக்கு குறைந்த எண்ணிக்கையிலான எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருந்தாலும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இரட்டை இலையை மீட்பதற்காகவும், மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்காகவும் அரசியல் அமைப்பு ஒன்றை தொடங்கினார்.
அதிமுக இணைப்பு
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஓகே சொன்ன ஓபிஎஸ், கூடவே சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இதுதான் சாக்கு என்று எண்ணிய மூத்த அமைச்சர்கள் இரவோடு இரவாக கூட்டம் கூட்டி, சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்க முடிவு செய்வதாக அறிவித்தனர்.
தினகரன் ஆதரவாளர்கள் போர்க் கொடி
இதனிடையே, அதிமுக இணைப்புக்காக சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்குவது என்ற முடிவை ஏற்க முடியாது என்று எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், கதிர்காமு, தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி உள்ளிட்டோர் போர்க் கொடி உயர்த்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்தது ரெடியானது.
எம்எல்ஏ-கூட்டம்
இந்த கட்சியில் திவாகரனுக்கென்று தனி அணி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாதி அடிப்படையில் ஒன்று சேர்ந்த 28 எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டங்களை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் தங்கள் ஜாதியினருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். எனினும், இந்தக் கூட்டம் நடைபெற்றதாக கூறுவது பொய் என்று எடப்பாடி அணியினர் மறுத்தனர்.
மற்றொரு அணி உதயமா?
சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷை அதிமுகவுக்கு தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் சென்னையின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. இது யார் செய்த வேலை என்பது குறித்தும் எடப்பாடி அணியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த வெங்கடேஷ்?
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் இந்த வெங்கடேஷ். இவர் தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரருமாவார். இவர் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்
இந்நிலையில் தஞ்சாவூர் அருகே விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2011-இல் நீக்கப்பட்டார் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தினகரனுடன் வெங்கடேஷ் கட்சியில் இணைந்தார்.
அழைப்பது யார்?
மாமா டிடிவி தினகரன் கைதாகியுள்ளதால் மச்சான் வெங்கடேஷை தலைமையேற்க அழைத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஒட்டியது யார்? இது வெங்கடேஷ் செய்த ஏற்பாடா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுகவில் இன்னும் எத்தனை அணிகள் உருவாகுமோ தெரியலையே?