குற்றாலத்தில் தாங்க முடியாத குடிமகன்களின் கொட்டம்... முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்..
தென்காசி : குற்றாலத்தில் குடிகாரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் மேலும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். இந்த நாட்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் குடும்பத்தோடு வருபவர்களைத் தவிர தனியாக வருபவர்கள், நண்பர்களோடு வருபவர்கள் பலர் குளித்து, குடித்து கும்மாளம் போட்டு தங்களை தாங்களே அசிங்கப்படுத்தி கொள்ளும் நிகழ்வுகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் இன்றுவரை குடித்துவிட்டு சாலையில் கும்மாளம் போட்டவர்கள், காரில் வந்து சாலையில் நின்று குடித்தவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஒட்டியவர்கள் என சுமார் 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் பலர் குடித்து விட்டு அருவிக்கரையில் ஆபாசமான முறையில் தரையில் உள்ளாடையோடு கிடப்பதும், அருவிக்குள் நின்று கூச்சல் போடுவதும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது.
காவல்துறை எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் அனைத்தும் வீண் தான்.
உயர்நீதிமன்ற மதுரைகிளை கடந்த ஆண்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அப்படியிருந்தும் ஆட்டங்கள் குறைந்த பாடில்லை. குற்றாலத்தில் உள்ள இரண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடினால் தான் இந்த நிலை மாறும் என்கின்றனர் ஒருதரப்பு சுற்றுலாப் பயணிகள்.
ஆனால் இன்னொரு தரப்போ குற்றாலம் வருவதே குடித்து கும்மாளம் போட்டு குளிக்கத்தானே என்கின்றனர். இதற்கு தீர்வுதான் என்ன...?