கமலுக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள்... அமைச்சர்களுக்கு எதிராக கொந்தளிப்பு!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தும் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: ஊழல் குறித்து அரசுக்கு ஆதாரத்துடன் புகார் அளியுங்கள் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாணவர் அமைப்பை சேர்ந்தவர், ஊழல் இருப்பதாக கூறியதற்காக நடிகர் கமல்ஹாசனை மிரட்டும் தொணியில் பேசுவதை அமைச்சர்களும், அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும். குட்கா விவகாரத்தில் லஞ்சப் புகாருக்கு ஆளாகியுள்ள காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போன்று அரசுப் பணிக்கு பணம் கேட்ட அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலில் திளைத்த அமைச்சர்கள் எல்லாம், கோட்டையில் உள்ளதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வளர்மதியை விடுதலை செய்யவும் கோரிக்கை விடுத்தனர். லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக சட்டமாக கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராடினர். ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். #we support kamalhassan என்ற பேனர்களை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.