இனி உண்டியலில் ரூபாய் போட வேண்டாம்.. திருத்தணி கோயிலில் இ-உண்டியல் ரெடி
ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்தும் வகையில் இ-உண்டியல் திருத்தணிக் கோயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பணம் என்று சொல்லப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறைகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருத்தணி கோயிலில் இ-உண்டியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, கோயில் உண்டியல்களில் நிறைய பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் போட்டு வந்தனர். இவை கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறப்படும் நிலையில் இதனையும் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தணியில் இ-உண்டியல் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது.
திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக இ-உண்டியல் முறையை கோயில் நிர்வாகம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பக்தர்கள் தங்களது காணிக்கை தொகையை கோயிலுக்கு செலுத்தலாம்.இதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மலைக்கோயிலில் இ-உண்டியல் அமைத்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரம் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் காணிக்களை பக்தர்கள் செலுத்தலாம்.