சந்திர கிரகணம்..திருத்தணி, திருநள்ளாறு,காளஹஸ்தி கோவில்கள் நடை திறந்திருக்கும்..காரணம் இதுதான்!
சென்னை: முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதால் தமிழகம், ஆந்திராவில் உள்ள பிரபல கோவில்களின் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருநள்ளாறு சனிபகவான் கோவில், திருத்தணி முருகன் கோவில், காளஹஸ்தி சிவன் ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்பட்டுள்ளது. காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை 11 மணி நேரம் நடைசாத்தப்படுகிறது. மேலும் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 22 உப கோயில்கள் காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கிரகணத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோவில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் எனவும் தீர்த்தம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவில்
திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கம் போல் காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரகணத்திற்கு பரிகார பூஜைகள் வழக்கமாக முன்கூட்டியே நடப்பதால், காலம், காலமாக சூரியன் மற்றும் சந்திரன் கிரகணத்திற்கு திருத்தணி முருகன் கோவில் நடை சாத்தப்படுவதில்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநள்ளாறு சனிபகவான் கோவில்
சந்திர கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. உலகிலேயே சனி பகவானுக்கு என தனி சன்னதி, திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. கிரகணம் நிகழும் போது வீடுகளில் தர்ப்பை புல்லை பயன்படுத்துவார்கள். தர்ப்பை மகிமை வாய்ந்தது. திருநள்ளாறு ஸ்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர். அங்கு தல விருட்சமே தர்ப்பை புல்தான் எனவே கிரகண தோஷங்கள், எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது என்பதால்தான் இந்த கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.

காளஹஸ்தி கோவில்
காளஹஸ்தி கோவிலில் இன்றைய தினம் வழக்கம் போல பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன. இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. எனவேதான் இன்றைய தினம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications