திருத்தணியில் காலையில் 111 டிகிரி கடு கடு வெயில்… மாலையில் குளு குளு மழை… மக்கள் உற்சாகம்
திருத்தணியில் இன்று 111 டிகிரி வெயில் கொளுத்தி தாக்கியது. இதனால் கஷ்டப்பட்ட மக்கள் மாலையில் மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி: திருத்தணியில் இன்று 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக ஆங்கே மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இதனால், வெயிலின் கடுமைக்கு பலியான மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஆலங்கட்டி மழை
சிவகங்கை மக்களை வெப்பம் வதக்கி வந்த நிலையில் இன்று அங்கு ஆலங்கட்டி மழை பெய்வதுள்ளது. கடும் வெயிலுக்கு சாதாரண தூறல் வந்தாலே மகிழ்ச்சி அடையும் மக்கள், சிறு சிறு வெண்மணிகள் போன்று வானத்தில் இருந்து ஆலங்கட்டி மழை பெய்தால் கேட்கவா வேண்டும். ஆலங்கட்டி மழையால் சிவகங்கை பொதுமக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் திளைத்துள்ளனர்.
கனமழை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வடுக்கப்பட்டி, ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நல்ல மழை
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வெப்பம் தணியும் வரை தொடர்ந்து மழை நீடிக்க வேண்டும் என்று மக்கள் தங்கள் எதிர்ப்பார்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மிதமான மழை
பெரம்பலூரில் மிதமான மழை பெய்து வருகிறது. இதே போன்று, ராசிபுரம், வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.