ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் எப்போது?
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் வரும்போது தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மீண்டும் எப்போது தேர்தல் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் அப்போது சிக்கியது.
மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இதையடுத்து இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் வரும்போது தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.