திருக்குறளையும் மூவேந்தர்களையும் மேற்கோள்காட்டி உரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி
திருக்குறளை மேற்கோள் காட்டி உரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
Recommended Video
சென்னை: திருவிடந்தை ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 10-ஆவது பிரம்மாண்ட கண்காட்சி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சி தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிவைக்கப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில் தமிழகத்தில் முதல் முறையாக ராணுவ தளவாட கண்காட்சி நடப்பதை வரவேற்கிறோம். தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
அனைத்து தொழில் முதலீடுகளுக்கும் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஓபிஎஸ் பேசினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 24 சதவீதம் தமிழக பங்கு வகிக்கிறது.
தமிழர்கள் வீரமிக்கவர்கள், தங்கள் தாய் நாட்டுக்கான கடமையையாற்றுவார்கள் என்றார். தமிழக பண்டைய ஆட்சியாளர்கள் சேர, சோழ, பாண்டியர்களை மேற்கோள்காட்டியும் உரை நிகழ்த்தினார் முதல்வர்.