சிக்கலில் ஈழத் தமிழர்கள்-அகதிகளாக பதிய மத்திய அரசு அனுமதி தராததால் அவதி- தமிழக அரசு குரல் தருமா?
ராமேஸ்வரம்: இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத் தமிழர்கள் முறைப்படி அகதிகளாக இன்னமும் பதிவு செய்யப்படவில்லை; இதனால் சிறைச்சாலை போல மறுவாழ்வு முகாம்களில் மட்டுமே ஈழத் தமிழர்கள் அடைபட்டு கிடக்க வேண்டிய துயரத்தில் இருக்கின்றனர் ஈழத் தமிழ் பிரதிநிதிகள்.
இலங்கையில் உச்சகட்ட பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கையில் பணம் இருந்தாலும் பொருட்களை வாங்கவே முடியாத அளவுக்கு தட்டுப்பாடும் விலைவாசியும் இருக்கிறது. இதனால் இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு காலிமுகத் திடலில் 26 நாட்களாக இரவும் பகலுமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய்க்கு விற்றால் எப்படி வாழ்வது?”
75தமிழர் வருகை
இந்த துயரமான சூழ்நிலையில் இலங்கையில் வாழவே முடியாது என்பதா தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் வருகை தருகின்றனர். இதுவரை 75 ஈழத் தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். பொதுவாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆவணங்கள் இல்லாமல் வந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அப்படி செய்யாமல் சில விசாரணைகளுக்குப் பின்னர் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். தற்போது தமிழகம் வருகை தந்த 75 ஈழத் தமிழரும் மண்டபம் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஸ்டாலின் ஆலோசனை
இப்படி தமிழகம் வருகை தந்த ஈழத் தமிழருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது, தங்களை இன்னமும் அகதிகளாக பதிவு செய்யவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஈழத் தமிழரை அகதிகளாக பதிவு செய்வதற்கான உத்தரவு மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம். விரைவில் நீங்கள் அனைவரும் அகதிகளாக பதியப்படுவீர்கள் என உறுதி அளித்தார்.
அகதி பதிவு
இது தொடர்பாக மண்டபம் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் கூறுகையில், நாங்கள் வெளியே வேலைகளுக்கு சென்றால் தான் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். ஆனால் வெளியே செல்ல வேண்டுமானால் அகதிகளாக நாங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்போதுவரை தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உள்ளது. ஆனால் அடுத்த செலவுகளுக்கு பணம் தேவை. அதனால் நாங்கள் வேலைக்கு செல்ல அகதி என்கிற பதிவு தேவைப்படுகிறது. அதுதான் எங்களுக்கு அர்த்தமானதாக அமையும்.
Recommended Video
அகதியாக பதிவதால் என்ன பயன்?
அப்படி அகதிகளாக பதியாமல் இருந்தால் நாங்கள் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுகிற சூழ்நிலைதான் வரும். இது இலங்கையில் தத்தளிக்கும் தமிழரை துயரத்தில் தள்ளிவிடும். நாங்கள் இலங்கைக்கு இனி செல்லப் போவது இல்லை. வாழ்வதும் சாவதும் தமிழ்நாட்டில்தான் என்கின்றனர். இனியாவது மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் கரிசனம் காட்டுமா? இதற்காக கடுமையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழகம் தருமா?