இவர் போட்டியிடாத தேர்தலும் இல்லை.. மோதாத தலைவரும் இல்லை.. இப்ப மோடியை எதிர்த்து!
சென்னை: தேர்தல் மன்னன் என்று அறியப்படுபவர் பத்மராஜன். கேரளாவைச் சேர்ந்தவர். ஹோமியோபதி மருத்துவர். இவரது பொழுதுபோக்கே தேர்தலில் போட்டியிட்டு தோற்பதுதான். அந்த வரிசையில் லோக்சபா தேர்தலிலும் களம் காணத் தயாராகி விட்டார் பத்மராஜன்.
இந்த முறை அவர் போட்டியிடப் போகும் தலைவர் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுகிறாராம் பத்மராஜன்.
இதற்கு முன்பு இவர் இந்தியாவின் முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியி்டவர். ஏன், குடியரசுத் தலைவர் தேர்தலையும் கூட இவர் விட்டதில்லை. ஆனால் அங்கு வேட்பு மனுக்கள் தள்ளுபடியானவர்.
கேரளத்திலிருந்து சேலத்திற்கு
கேரளாவின் பய்யனூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். இப்போது ஜாகை சேலத்தில். நீண்ட காலமாக இங்குதான் வசித்து வருகிறார்.
25 வருடமாக இதே பொழப்பு
பத்மராஜன் இன்று நேற்று அல்ல கடந்த 25 வருடமாக இப்படித்தான் தேர்தலில் போட்டியிடுவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.
157 முறை போட்டி
குடியரசுத் தலைவர் தேர்தல், சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல் என இதுவரை 157 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
எல்லாம் விஐபி தொகுதிகள்தான்
இவர் போட்டியிடுவது அனேகமாக ஏதாவது விஐபி தொகுதியாகத்தான் இருக்கும். சாதாரண தொகுதிகளில் போட்டியிட மாட்டார்.
டெபாசிட்டுக்கே ரூ. 12 லட்சம் போச்சு
இதுவரை டெபாசிட்டாக கட்டிய பணத்தை இவர் திரும்பப் பெற்றதே இல்லை. இப்படி மட்டும் இவர் ரூ. 12 லட்சம் வரைக்கும் இழந்திருக்கிறாராம்.
கே.ஆர்.நாராயணன் முதல் மன்மோகன் வரை
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் என பல முக்கியத் தலைவர்களுடன் மோதியவர் இவர்.
11 முதல்வர்களை எதிர்த்தவர்
இதுவரை நாடு முழுவதும் 11 முதல்வர்கள், 13 மத்திய அமைச்சர்கள், 14 மாநில அமைச்சர்கள் என பெரிய லெவலில் மோதியவர்.
கருணாநிதி, ஜெயலலிதாவையும் எதிர்த்து
திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களையும் இவர் விட்டதில்லை.
இப்போது மோடியை எதிர்த்து
இந்த நிலையில் தற்போதைய லோக்சபா தேர்தலில் அவர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறாராம்.
ஏன் இப்படி தொடர் மோதல்
இதுகுறித்து பத்மராஜனிடம் கேட்டால், தேர்தலில் போட்டியிடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை, உரிமை ஆகும். இதை நிலைநாட்டத்தான் நான் தொடர்ந்து போட்டியிடுகிறேன் என்றார்.
அப்பாவால் மகனுக்குப் பெருமை
பத்மராஜனுக்கு ஒரே ஒரு மகன் பெயர் ஸ்ரீஜித். இவர் எம்.பிஏ இறுதியாண்டு படிக்கிறார். தனது தந்தை தேர்தலில் போட்டியிடுவதும், அவரது நோக்கமும் தனக்குப் பெருமை தருவதாக ஸ்ரீஜித் கூறுகிறார்.